Monday, May 03, 2010

இடமாறு தோற்றப்பிழை

யாருமற்ற பெருவெளியில்
பஞ்சுப்பொதி சுமந்தபடி
ஊர்ந்துகொண்டிருந்த யானை,

நான்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
உடல் குறுக்கி, துதிக்கை உயர்த்தி
ஒரு கோபுரமாய்ச் சமைந்தது

அந்த யானையின் படைப்பில்
என் பங்களிப்பும்
உண்டெனினும்,

அது காணாமல் போனதைப் பற்றிய
சஞ்சலங்கள் ஏதுமில்லை
என்னிடம்

புதிதாய் முளைத்த
கோபுரம் ஏற்படுத்திய
கிளர்ச்சி மட்டுமே

கல்பகாலமல்ல
கால் நிமிடம்தான்

கல்விழுந்த குளமென
சிறிய சலசலப்பில்
கோபுரம் சரிந்துவிழுந்து
தவழும் குழந்தையானது

அம்மாவிடம் அடம்பிடித்தும்
கிடைக்காத ஐஸ்க்ரீம்
ஆசையுடன் நான் நட்ட
பூச்செடி
சாகசங்கள் புரியும்
இரும்புக்கை மாயாவி

என் மனதுக்கு நெருக்கமான
அத்தனையாகவும் உருக்கொண்ட
அந்த மாயக்கம்பளம்
வெறும் வெண்மேகமென
உணர்ந்த ஒரு நாளில்
நான் வளர்ந்துவிட்டிருந்தேன்