Monday, July 28, 2008

பேசாப்பொருள் - III



Man acts as though he were the shaper and master of language, while in fact language remains the master of man.
-Martin Heidegger


மொழி என்பது வெறும் எழுத்துக்களாலும் சொற்களாலும் ஒலிகளாலும் கட்டப்படவில்லை. உணர்ச்சிகளால் கட்டப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடே மொழியானதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு மொழியுமே ஒரு ஆச்சரியம்தான். ஒவ்வொரு மொழிக்கும் அதன் ஒலிவடிவையும் வரிவடிவையும் கடந்ததொரு பரிமாணம் இருக்கிறது.

கோபத்திற்கு உருவம் உண்டென்றால் நம்ப முடியுமா? உண்டு என்பதே உண்மை. கோபம் என்பதை மனம் அப்படியே உணர முடியாது. மனத்திற்கு புரியும் வகையில் ஒரு உருவம் அதற்கு வழங்கப்படுகிறது. கோபம் என்ற சொல்
நமக்குத் தெரிந்த எந்த மொழியில் இருந்தாலும், ஒரு pointer மாதிரி, அனைத்து சொற்களும், ஏற்கனவே மனம் உருவகப்படுத்தியிருக்கும் அந்த கோபத்திற்கு திசைகாட்டப்படுகின்றன.
நாம் உணரும் உருவமும், நம் மனம் உணரும் உருவம் முற்றிலும் வேறுபட்டவை.

மனத்தைப் பொறுத்த வரையில் அருவம் என்பதே கிடையாது. வெகு சில ஒலிகளைத் தவிர அனைத்திற்கும் ஏதோ ஒரு உருவத்தை அல்லது உருவகத்தை வகுத்துக் கொள்வதால் மனதிற்கு அருவம் மிக அரிது. ஏதோ ஒரு மோட்டாரின் உறுமல் கேட்கிறது. அதை கேட்கும் நபரின் அறிவின் விஸ்தரத்தைப் பொறுத்து, ஒருவனுக்கு அது வாகனமாக உருவகிக்கிறது. மற்றொருவனுக்கு அது ஒரு இரு சக்கர வாகனமாகவும், சிலருக்கு அது Hero Honda Splendor ஆகவும் உருவமாகிறது. மனம் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஒலிக்கும், இன்னும் சொன்னால், ஒவ்வொரு உள்ளிடலுக்கும் (input) ஏதோ ஒரு உருவத்தை ஒதுக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறது. அது நீங்கள் இது வரை கேட்டே இராத ஒரு ஒலியாகக் கூட இருக்கலாம்.

அருவம் உருவம் பெறும் அந்த கணம், அலாதியானது. அது வரை கற்பனையில் புலப்படாதற்கெல்லாம் ஒரு உருவம் கொடுக்கத் தொடங்குகிறது மனம்.

ஆம்.உண்மையில், ஒவ்வொரு மொழியும் ஒரு அற்புதம் தான்.

இன்னதுதான் நான் புரிந்து கொண்டது என்று நான் உங்களுக்கு உணர்த்துவது கடினம்.
அன்று ஏதோ சோகத்தில் இருந்தார் போலும். அதற்கான காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது. எதுவும் செய்யாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதற்கடுத்த நாள் சந்தோசமாய் இருந்தார். அடுத்தடுத்த நாட்களில், அவரைப் பார்ப்பதே எனக்கு சந்தோசமாய் ஆகிப்போனது. ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கும் அவரிடம். மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டிருப்பார். சோகமாக இருக்கும் போது மட்டும் பெருமூச்சுடன் கூடிய ஒரு மௌனம்.

எனக்கு ஒரு வகையில் கொஞ்சம் சிரிப்பாகக் கூட இருந்தது. எங்களிருவருக்கிடையில் இருப்பது என்ன உறவு. வெளியிருந்து பார்த்தால் நானே இதை பைத்தியக்காரத்தனம் என்றுதான் சொல்லியிருந்திருப்பேன்.
அவர் பேசுவது என்ன மொழி என்ற கேள்விகளெல்லாம் முக்கியத்துவமிழந்து போயிருந்த ஒரு நாள் எனக்கு முன்னமே வந்து காத்துக் கொண்டிருந்தார்..

முதலில் என்னைக் காணும் போது அந்த முகத்தில் தெரியும் அந்த மலர்ச்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று தோன்றியது.
தானே செய்ததாகக் கூறி ஒரு பலகாரம் கொடுத்தார். இனிப்பும் கசப்பும் ஒன்றாகக் கலந்த பலகாரம் அது. பிடித்திருந்ததா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், எனக்காக அவர் கொண்டு வந்திருந்தது பிடித்திருந்தது. அந்த பலகாரம் வாழ்வின் தத்துவத்தை உணர்;த்துவதாக அவர்களின் நம்பிக்கை. எனக்கும் ஆம் என்று பட்டது.

எப்படி என்று தெளிவாகச் சொல்லத்தெரியா விட்டாலும், என் தினசரி வாழ்வின் தவிர்க்க இயலா அங்கமாகிப்போனது அந்த சந்திப்பு. தவிர்க்க வேண்டிய சில கட்டாய நாட்களில் அதன் வெறுமைய உணர ஆரம்பித்தேன்.
ஒரு வெள்ளிக்கிழமையன்று, வீடு திரும்புகையில் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டின் முன் மெல்லிய கூட்டம். உள்ளிருந்த அழுகை சத்தம் கேட்டது. எனக்கென்ன என்று நான் கிளம்ப முயற்சித்த நேரம், அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரின் முகம் பரிச்சயமாகத் தெரிந்தது. ஏதோ ஒரு வடகிழக்கு இந்திய முகம். மூளையில் பல்ப் எரிவதற்குள் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. உடனடியாக விரைந்து சென்றேன்.

யாரும் அழைக்காமல் ஒரு வீட்டிற்குச் செல்வது அவ்வளவு நாகரிகமாகப் படவில்லை. ஆனால், அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் நான் இல்லை.
வரவேற்பறையின் ஒரு மூலையில் முழங்காலில் முகம் புதைத்தபடி ‘அவர்’ அழுது கொண்டிருந்தார். அந்த குழந்தை ஒருவித மருண்ட விழிகளுடன் சோபாவில். நின்ற வாக்கில் அதே பார்வையுடன் அவர் மகன்.
அருகில் சென்றேன். நான் எதுவுமே சொல்லாமல் என்னை அவர் நிமிர்ந்து பார்த்தது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது அந்த அழுகை குறைந்து தேம்பல் மட்டும் மிச்சமிருந்தது.
கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தபின்

“மாடிக்கு வாங்க” என்றேன் தமிழில்.

அந்த மகன் என்னை விநோதமாய்ப் பார்ப்பது தெரிந்தது. அழுகைக்குப் பின் மிட்டாய் வாங்கித்தருவதாய் வாக்குறுதி பெற்ற குழந்தையைப் போலவே அவர் தெரிந்தார். எதுவும் பேசாமல் என்னுடன் மாடிக்கு வந்தார்.
ரொம்ப நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. பேசாமல் இருப்பது அவருக்கு புதிதில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை இப்படி மௌனியாகப் பார்ப்பது எனக்கு என்னவோ செய்தது. அன்று நான் பேசினேன். என்னன்னமோ பேசினேன். மானேஜர் மீதிருந்த கோபம், காதலியின் முத்தம், புதிதாக வாங்கிய டையரி என முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் ஏதேதோ சொன்னேன்.
ரொம்ப சந்தோசமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இவர்தான் இன்று மாலை அழுது கொண்டிருந்தவர் என்று சொன்னால் சத்தியமாக யாரும் நம்பிருக்க மாட்டார்கள். அன்றிரவு கொஞ்சம் தாமதமாக உறங்கிப்போனேன்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் யாரோ கதவைத்தட்டும் ஓசை. கதவைத் திறந்தால் அவரின் ‘மகன்’.
அவரை வீட்டுக்குள் அழைத்து அமரவைத்து, மொத்தமாக தூக்கத்திலிருந்து மீண்டு அவரிடம் வருகையில், அவர் கேட்ட முதல் கேள்வி,

“உங்களுக்கு மணிப்புரி தெரியுமா?”

இல்லை என்பது போல் தலையாட்டினேன்.

“என் அம்மாவுக்கு வேறெந்த மொழியும் தெரியாது. பின் எப்படி அவருடன் பேசுகிறீர்கள்?”

“உங்களின் முதல் கேள்விக்கான என் பதிலை எப்படி புரிந்து கொண்டீர்கள். அப்படித்தான்..”

அதற்குப்பின் ஏதோ சொல்லவந்தவர் தயங்கியபடி நிறுத்தினார்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின்,

“சொன்னால் நம்பமாட்டீர்கள். என் அம்மா என்னுடன் பேசி பத்து வருடங்கள் ஆகின்றன.. என்னிடம் மட்டுமல்ல, யாரிடமும்..”

- இன்னும் பேசும்

No comments: