Wednesday, September 16, 2009

அலைக்குறிப்புகள்-3

அலைக்குறிப்புகள்-1
அலைக்குறிப்புகள்-2

நாங்கள் வந்தடைந்த டச் பேலஸ், உண்மையில் கொஞ்சம் பெரிய சைஸ் பங்களா மாதிரிதான் இருந்தது. இரண்டடுக்குகள், விஸ்தாரமான அறைகள், நீண்டிருக்கும் திண்ணையென நீண்டு படுத்திருந்தது அந்த மாளிகை.

16ம் நூற்றாண்டில் இதனைக்கட்டியர்வகள் போர்ச்சுக்கீசியர்களே. அதற்கடுத்த நூற்றாண்டில், தொடர்ந்து வந்த காலனியாதிக்கப் போரில், டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்ற இந்த அரண்மனையும் அவர்கள் வசமானது. அவர்களும் அவர்கள் பங்குக்கு அங்கங்கே சில மாறுதல்கள், அலங்காரங்கள் செய்து, போரினால் கோபமுற்றிருந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு இந்த மாளிகையை பரிசாக அளித்துவிட்டனர்.

அன்றிலிருந்து இது ஒரு ராஜ மாளிகை.

ராஜாக்களெல்லாம் ராஜ்ஜியமிழந்து போக, இப்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது.

ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேல் இந்த காட்சியகத்தினுள் அலைந்தோம். ராஜாக்கள் பயன்படுத்திய கர்சீப்பிலிருந்து பல்லக்கு வரைக்கும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். குடும்ப ஓவியங்கள், கேரளாவின் அரச பரம்பரையை விளக்கும் ஓவியங்கள் என்று விதவிதமாய் காட்சிக்கு கிடைக்கின்றது அரச வாழ்க்கை.

மேற்கத்திய கட்டிடக்கலைக்கும் இந்திய கட்டிக்கலைக்குமான கலப்பை இங்கு தெளிவாக உணரமுடியும். கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பும் நுழைவாயிலும் பாரம்பரிய கேரள வடிவில் அமைந்திருந்தாலும், உள்நுழையும் போது உயர்ந்த நிலைப்படிகளும் கதவுகளும் மேல் நோக்கிய ஆர்க் வடிவில் மேற்கத்திய பாணியை நினைவுபடுத்துகின்றன.

மேலும் படிக்க...

Sunday, September 06, 2009

அலைக்குறிப்புகள்-2

அலைக்குறிப்புகள்-1

எங்கள் சொந்த கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாங்கள் வந்திறங்கிய போர்ட் கொச்சியின் போட் ஜெட்டிக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக மற்றொரு ஞாயிற்றுக் கிழமையை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த நகரம்.

ஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் படும் முதல் விஷயம், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தொடர்பான சுவரொட்டிகள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்.

பெரிதாக திட்டம் எதுவும் இல்லை எங்களிடம். போட் ஜெட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன், இடது புறம் 'டச் பேலஸ்' என்று போர்ட் போட்டு 1.5 கிலோமீட்டர்கள் என்று போட்டிருந்தது. அதுவே எங்களின் முதல் திட்டமானது. வெயிலின் உக்கிரம் தொடங்காத காலை வேளை என்பதால் நடந்தே செல்லலாம் என்று தொடங்கினோம். மிக அமைதியான கடைவீதி.. மிக மிக அமைதியான தெருக்கள் என்று வழி நெடுகிலும் கிராமத்துக்கான உணர்வைத் தந்து செல்கிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் வாழ்ந்த சுவடுகளும் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாய் அறிவித்த பெயர்ப்பலகை ஒன்று ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு காலத்தின் சுவடுகளைச்சுமந்த மிச்சம் இன்னமும் எஞ்சிய படி கண்ணில் பட்டது. கடையின் கதவுகள் திறந்திருக்காத நிலையில் இன்னமும் அந்த கடை அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதா என்று ஆச்சரியப்படுத்தியது.

மேலும் படிக்க...