Monday, November 30, 2009

விகடனில் புத்தகம்

இந்த வார (02/12/2009) விகடனில் புத்தகம் வலைப்பூவைப் பற்றிய அறிமுகம் 'வரவேற்பறை' பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடன்வரும் நண்பர்கள் அனைவருடனும் இம்மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் :)

மேலும் தகவல்கள் இங்கே

- Bee'morgan

Wednesday, November 25, 2009

பூவும் தலையும்- தொடர்பதிவு

கொஞ்ச நாட்களாகவே இணையம் பக்கம் வரமுடியாதபடி ஆணிகள் பெருகியிருந்த நிலையில், சேரலிடமிருந்து கிடைத்தது இந்த தொடர்பதிவு அழைப்பு.. அண்ணன் சொல்லிட்டாருல்ல.. தட்ட முடியுமா? இதோ என் பங்குக்கு நானும் தொடர்கிறேன்..

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

ம்ம். இது போதும். இனி எனக்குப் பிடித்த சில தலைகள்..

1)தொலைக்காட்சியில்
பிடித்தவர்கள்:
கோபிநாத், அனு ஹாசன், சின்மயி (எல்லாரும் விஜய் டிவியான்னு கேக்காதீங்க.. இது தற்செயலானதே )

பிடிக்காதவர்கள்:
சுஹாசினி
விதிவிலக்கில்லாமல் சன்மியூசிக்கின் அனைத்து தொகுப்பாளர்களும்
மானாட மயிலாட வரும் நடுவர்கள் அனைவரும்

2) விளம்பரங்களில்
பிடித்தவர்கள்: சிலருண்டு. ஆனால் பெயர் தெரியாது. அடுத்த முறை டிவியில் வரும் போது காட்டறேன் ;)

பிடிக்காதவர்கள்:

அப்பாஸ் - பத்து நாயகிகளுடன் உப்புக்குச் சப்பாணி கேரக்ட்டராக இருந்தாலும் அவரோட மனதைரியத்துக்காக

சூர்யா : சுடர்மணி ஜட்டிகளைத் தவிர பாக்கி எல்லாத்திலயும் நடிச்சுட்டார்னு நினைக்கிறேன். இவர் கொஞ்சம் விளம்பரங்களைக் குறைச்சுகிட்டா நல்லாயிருக்கும்

அப்புறம் நமீதாவுக்கும் TMT கம்பிக்கும் என்ன சம்பந்தம்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

3) படத்தயாரிப்பில்
பிடித்தவர்கள்:
பிரகாஷ்ராஜ், ஷங்கர் அவசரத்தில் நினைவுக்கு வராத இன்னும் சிலர்

பிடிக்காதவர்கள்:
கலாநிதிமாறன், உதயநிதி (இவங்கள்லாம் நெனச்சா குருவி மாதிரி ஒரு படம் எடுக்கறதுக்கு தரமா இன்னும் நாலு படம் எடுக்கலாம். எவ்வளளோ பண்றாங்க. இதப் பண்ண மாட்டாங்களா? )

4) வசனத்தில்
பிடித்தவர்கள்:
எப்போதும் சுஜாதா :) அப்புறம் பாக்யராஜ், விஜி, சிற்சில முறைகள் பாலகுமாரன்

பிடிக்காதவர்கள்:
கலைஞர்

5) எழுத்தில்
பிடித்தவர்கள்:
சுஜாதா, கல்கி, எஸ்ரா, வண்ணதாசன், கி.ரா இது கொஞ்சம் பெரிய பட்டியல்.. அதனால இத்தோட போதும்

பிடிக்காதவர்கள்:
சாருவின் சில எழுத்துகள் அதன் காட்டத்தினாலேயே பிடிக்காமல் போனது. ஒரு சில இலக்கிய அரசியல்களில் மட்டும் ஜெமோ

6) பாடலில்
பிடித்தவர்கள்:
SPB, ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன்,கார்த்திக், சித்ரா, ஹரிணி, ஷ்ரேயா கோஷல்

பிடிக்காதவர்கள்:
சில பாடல்களில் மனோ, மற்றபடி பெரிதாக யாரும்இல்லை

7) ஓவியர்களில்
பிடித்தவர்கள்:
மாருதி, மதன், மணியம் செல்வன்

பிடிக்காதவர்: நான் சமீபத்தில் வாங்கிய பொன்னியின் செல்வன் பதிப்புக்கு ஓவியம் வரைந்தவர். வரைந்தவர் பெயர் போடவில்லை. குந்தவையைப் பார்த்து டென்சனாயிட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ். வந்தியத்தேவன் ஒரு படி மேலே போய் காமெடி பீஸ் மாதிரி இருந்தார். இந்த மாதிரி படம் போடறதுக்கு படம் இல்லாமலேயே பொசெ அருமையா இருக்கும்.

அப்பாடா.. ஒரு வழியா முடிச்சிட்டேனா.. அடுத்து இன்னும் மூணு பேர கோத்துவிடனுமாம்.. இதோ

ரெஜோ
சாணக்கியன்
Smiley

வாங்க மக்கா. .வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடுங்க.. :)

Wednesday, September 16, 2009

அலைக்குறிப்புகள்-3

அலைக்குறிப்புகள்-1
அலைக்குறிப்புகள்-2

நாங்கள் வந்தடைந்த டச் பேலஸ், உண்மையில் கொஞ்சம் பெரிய சைஸ் பங்களா மாதிரிதான் இருந்தது. இரண்டடுக்குகள், விஸ்தாரமான அறைகள், நீண்டிருக்கும் திண்ணையென நீண்டு படுத்திருந்தது அந்த மாளிகை.

16ம் நூற்றாண்டில் இதனைக்கட்டியர்வகள் போர்ச்சுக்கீசியர்களே. அதற்கடுத்த நூற்றாண்டில், தொடர்ந்து வந்த காலனியாதிக்கப் போரில், டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்ற இந்த அரண்மனையும் அவர்கள் வசமானது. அவர்களும் அவர்கள் பங்குக்கு அங்கங்கே சில மாறுதல்கள், அலங்காரங்கள் செய்து, போரினால் கோபமுற்றிருந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு இந்த மாளிகையை பரிசாக அளித்துவிட்டனர்.

அன்றிலிருந்து இது ஒரு ராஜ மாளிகை.

ராஜாக்களெல்லாம் ராஜ்ஜியமிழந்து போக, இப்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது.

ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேல் இந்த காட்சியகத்தினுள் அலைந்தோம். ராஜாக்கள் பயன்படுத்திய கர்சீப்பிலிருந்து பல்லக்கு வரைக்கும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். குடும்ப ஓவியங்கள், கேரளாவின் அரச பரம்பரையை விளக்கும் ஓவியங்கள் என்று விதவிதமாய் காட்சிக்கு கிடைக்கின்றது அரச வாழ்க்கை.

மேற்கத்திய கட்டிடக்கலைக்கும் இந்திய கட்டிக்கலைக்குமான கலப்பை இங்கு தெளிவாக உணரமுடியும். கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பும் நுழைவாயிலும் பாரம்பரிய கேரள வடிவில் அமைந்திருந்தாலும், உள்நுழையும் போது உயர்ந்த நிலைப்படிகளும் கதவுகளும் மேல் நோக்கிய ஆர்க் வடிவில் மேற்கத்திய பாணியை நினைவுபடுத்துகின்றன.

மேலும் படிக்க...

Sunday, September 06, 2009

அலைக்குறிப்புகள்-2

அலைக்குறிப்புகள்-1

எங்கள் சொந்த கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாங்கள் வந்திறங்கிய போர்ட் கொச்சியின் போட் ஜெட்டிக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக மற்றொரு ஞாயிற்றுக் கிழமையை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த நகரம்.

ஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் படும் முதல் விஷயம், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தொடர்பான சுவரொட்டிகள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்.

பெரிதாக திட்டம் எதுவும் இல்லை எங்களிடம். போட் ஜெட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன், இடது புறம் 'டச் பேலஸ்' என்று போர்ட் போட்டு 1.5 கிலோமீட்டர்கள் என்று போட்டிருந்தது. அதுவே எங்களின் முதல் திட்டமானது. வெயிலின் உக்கிரம் தொடங்காத காலை வேளை என்பதால் நடந்தே செல்லலாம் என்று தொடங்கினோம். மிக அமைதியான கடைவீதி.. மிக மிக அமைதியான தெருக்கள் என்று வழி நெடுகிலும் கிராமத்துக்கான உணர்வைத் தந்து செல்கிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் வாழ்ந்த சுவடுகளும் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாய் அறிவித்த பெயர்ப்பலகை ஒன்று ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு காலத்தின் சுவடுகளைச்சுமந்த மிச்சம் இன்னமும் எஞ்சிய படி கண்ணில் பட்டது. கடையின் கதவுகள் திறந்திருக்காத நிலையில் இன்னமும் அந்த கடை அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதா என்று ஆச்சரியப்படுத்தியது.

மேலும் படிக்க...

Monday, July 27, 2009

இன்னுமொரு பாதை


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

இன்றிலிருந்து இனிதே துவங்குகிறேன், இன்னுமொரு பாதையில் என் பயணத்தை.

நான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் ஒரு அறிமுகத்தை இந்த பக்கத்தில் இனி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நினைக்கும் போதே ஒரு பயம் கலந்த சந்தோஷம் உண்டாகிறது. என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. திடுதிப்பென்று களத்தில் இறக்கிவிடப்பட்ட சிறுவனின் படபடப்புடன், தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சேர்ந்து, நான் கொள்ள வேண்டிய கவனத்தை இன்னும் அதிகரிக்கன்றன.

ஊக்கமும் உற்சாகமும் அளித்து, வழித்துணையென இப்பயணத்தில் என்னை இட்டுச்செல்லும் சேரலுக்கும் ஞானசேகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவர்கள் இருவருமாக இணைந்து 'புத்தகம்' வலைப்பூவிற்கென்று ஒரு அளவீட்டை முன்னமே ஏற்படுத்திவிட்டனர். இனியெழுதப்போகும் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால், அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அளவீடுகளைத் தொடர்வதே. என்னால் முடிந்த வரை இப்பணியை சிறப்பாகச் செய்ய விழைகிறேன்.

என்னுடைய முதல் பதிவு 'மெளனியின் கதைகள்' இங்கே.

இந்த பக்கத்திலும் உங்களின் நேர்மையான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்..

நட்புடன்,
பாலா

Thursday, July 23, 2009

கன சதுரம்

எங்கிருந்து தொடங்க.. என்னவோ யோசித்து எங்கெங்கோ தேடி, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு முன் தொடங்கியும் விட்டேன் இந்த வலைப்பூவை.
முழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.

இந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

அப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள் அ.மு.செய்யது interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



மேலும் படிக்க...

Wednesday, July 22, 2009

அலைக்குறிப்புகள் - I

ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் எர்ணாகுளம் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் அமைந்தது. கடந்த முறை எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் அதிகமாக நேரம் செலவழி்க்க முடியாமல் போனதால் இம்முறை நிச்சயம் கொச்சின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

உள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..

மேலும் படிக்க...

Tuesday, June 30, 2009

ஊஞ்சல்

அப்போது எத்தனை வயதிருக்கும். சரியாக நினைவிலில்லை. நெப்போலியனும் கஜினியும் பாடப்புத்தகங்களில் படையெடுக்கத்தொங்கியிருந்த காலம். ஏழாம் வகுப்பென்று நினைக்கிறேன். ஏதோ ஒரு நாளில் பள்ளியிலிருந்து திரும்பி வந்த போது அம்மாவின் குரல் கேட்டது.

"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."

அதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.

நாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.

ஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.

கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.

இது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.

மேலும் படிக்க...

Friday, June 12, 2009

சொல்லாத சொல்

எதிர்வீட்டு்க குழந்தை
உன்னைப்போலவே முறைக்கிறது
கைபேசிக்கு தலைசாய்த்து சாலையில்
எதிர்படுபவனின் சிகை
உன்னைப்போலிருக்கிறது
வாடியபூக்கள் சில வலுக்கட்டாயமாய்
உன் முகத்தை மனதில் இருத்திப் போகின்றன
கடன் அட்டைக்காக அழைப்பவன் கூட
உன் குரலை ஒத்திருக்கிறான்..

சாலையில், வீட்டில், திரையரங்கில்,
ஆற்றங்கரையில், பேருந்தில் என
நாம் ஒன்றாய் இருந்த அத்தனை
இடங்களிலும்
உன்னிடம் யாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு பதில் கிளம்புகையிலாவது
சொல்லியிருக்கலாம்
”என்னை மன்னித்து விடடா” என்று..

Wednesday, June 10, 2009

வாசகன்

ஒவ்வொரு ரயில் பயணத்தின்
முன்தினத்திலும் தவறாமல்
எடுத்துவைக்கப்படும் புத்தகங்கள்
பிரிக்கப்படாமலேயே ஊர்வந்தடைகின்றன..
அதைவிட சுவாரஸ்யமான
மனிதர்கள் வாசிக்கக்கிடைப்பதால்..

Wednesday, May 13, 2009

திருடர்கள் ஜாக்கிரதை

"டிக்.. டிக்.."

"யாரது?"

"திருடன்"

"என்ன வேணும்?"

"நகை வேணும்"

"என்ன நகை?"

"கலர் நகை"

"என்ன கலர்?"

"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"

ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..

உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?

மேலும் படிக்க...

Tuesday, May 12, 2009

கவிதைகள் மறுவாழ்வு மையம்


நீ அலட்சியமாய் தூக்கியெறிந்த
காகிதக் கோப்பையிலிருந்து
மனமுடைந்த கவிதைகள் சில
குதித்தோடிப் போயின
தற்கொலைக்கு..
நான்தான் சமாதானம் செய்து
அழைத்துவந்திருக்கிறேன்
நீ வருவாய் என..

கைவிடப்பட்ட கவிதைகள்
சங்கம் ஒன்று அமைக்குமுன்
வந்துவிடேன் சீக்கிரம்..!

Sunday, February 22, 2009

அரசூர் வம்சம்

”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.

அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?

பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.

கேட்டு விட்டு எழுதுகிறேன்.”


படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.

மேலும் படிக்க...

Saturday, February 07, 2009

உபபாண்டவம்

வாய்வழிக்கதைகளோ திரைப்படமோ தொலைக்காட்சியோ, இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்படும் விஷயங்களில் ஒன்று மகாபாரதம். எப்படியோ வந்து நம்முடன் ஒட்டிக்கொண்ட அதே பாரதம். அதே கதை. அதே மாந்தர்கள். ஆனால் எஸ்ரா திரும்பவும் சொல்லும் போது முழு பாரதமும் இது வரை கண்டிராத புதியதொரு பரிமாணம் கொள்கிறது.

இதுவரை நாம் கேட்டுவந்த பாரதங்கள் போல் படர்க்கையிலல்லாது முன்னிலையில் கதை சொல்லும் உத்தியே மிகவும் அலாதியானது.
மகாபாரதம் என்பது நடந்து முடிந்த கதையல்ல. அது நடக்கும் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை என்கிறார். ஒரு தேசாந்திரியாக அஸ்தினாபுரத்தினுள் நுழைந்து தன் கண்முன் நடக்கும் காட்சிகளாக பாரத்தை விவரிக்கிறார். முன்கதை தேவைப்படும் சில இடங்களில் சூதர்கள் சொல்லும் கதைகளாக நம்முன் வைக்கிறார்.

வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம். கொஞ்சம் கூட அவசரப்படாமல் நிதானமாக மிக நிதானமாக ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கும் மேலாக இந்நுலை படித்துமுடித்தேன். முடிக்கையில், கௌரவர்களும் பாண்டவர்களும் கதாமாந்தர்களாக இல்லாமல், நம் அண்டைவீட்டு மனிதர்களாக உருக்கொள்ளும் அந்த பிம்பமே ஆசியரியரின் வெற்றி.

நாம் இதுவரை பெயர் மட்டுமே அறிந்திருந்த பலருக்கு உணர்வும் உருவமும் தந்து உலவவிட்டிருக்கிறார். குறிப்பாக மயனின் முன்கதையும் ஜராவின் வஞ்சமும் ஏகலைவன் பெற்ற நாயின் சாபமும் போன்ற எண்ணற்ற கிளைக்கதைகள் பெருத்த அதிர்வினை ஏற்படுத்துகின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரண்மனையில் பாஞ்சாலியின் சிரிப்பொலியும் அதனால் துரியோதனன் கொண்ட சினமும் இயல்பாக நடந்தவையென்றே நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் தி்ட்டமிட்டே நடத்திவைக்கப்பட்டன என்று இவர் சொல்கையிலும் கூட கொஞ்சமும் முரண்படவிடாமல் மகுடிக்குக் கட்டுப்பட்ட சர்ப்பமென தன்னுடனேயே அழைத்துச்செல்கிறார்.

குறிப்பாக துரியோதன வதம் பற்றிய விவரிப்பில் துரியோதனனைப்பற்றி இதுவரை நாம் கட்டமைத்திருந்த அனைத்து பிம்பங்களும் உடைந்து சிதறுகின்றன. நாயகனுக்கும் அநாயகனுக்கும் இடையிலான யுத்தமாக விவரிக்காமல் இரு முரண்பட்ட கருத்துகள் கொண்டோருக்கு இடையிலான யுத்தமாகவே குருஷேத்திரம் இங்கு படர்கிறது.

படிக்கப்படிக்க ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்த மனிதர் வார்த்தைகளில் என்னவொரு லாவகத்துடன் விளையாடுகிறார். சுனையிலிருந்து பீறிடும் நீர் போல அத்தனை சரளத்துடன் ஒரு நடை. படிக்கும் போது ஒரு போதையென நம்மை ஆட்கொள்கிறது.

எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அனுபவம் அது. தீவிரவாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதது இந்த பாண்டவம்.

லயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால் மகாபாரதக்கதையில் ஓரளவுக்கு குழப்பமற்ற பரிச்சயம் நலம்.

உபபாண்டவம் பற்றி சேரலும் அருமையானதொரு பதிவிட்டிருக்கிறார் இங்கே.

இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்.

----------------------
உபபாண்டவம்
எஸ். ராமகிருஷ்ணன்
விஜயா பதிப்பகம்
384 பக்கங்கள்
ரூ. 150
----------------------

Saturday, January 03, 2009

சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்


நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது? நினைவிலிருக்கிறதா?

எனக்கு வரையவே வராது. நான் வரைந்ததே இல்லை என்று தத்து பித்து காரணங்களெல்லாம் வேண்டாம்.
நாம் எல்லாருமே வரைந்திருக்கிறோம்.. சிறிதோ பெரிதோ.. சுமாரோ சூப்பரோ, சிலேட்டோ தரையோ புதுச்சுவரோ, அதனை ஒரு தேர்ந்த ஓவியனுக்கே உரிய சிரத்தையுடன் மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமக்காக.. நமக்காக மட்டுமே வரைந்திருக்கிறோம்.. நினைவிலிருக்கிறதா?

ஆனா ஆவன்னாவிற்கும் முன்னதாக நம் கைவரப்பெற்ற கலை அது. நாம் கற்றுக்கொண்ட முதல் வரிவடிவம்..
வரைந்து முடித்த பின்பான அந்த மனநிலை நினைவிலிருக்கிறதா..? வரைந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா? தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா? பள்ளியில் ஓவிய நோட்டில், ஓரு மலை அதன் இடையிலிருந்து ஓடிவரும் ஒரு நதி, கரையில் ஒற்றைத் தென்னைமரம், அருகிரேயே வயல் சூழ்ந்த ஒரு குடிசை வரைந்த அனுபவம் உண்டா?

எங்கே இருக்கிறான் அந்த ஓவியன் இப்போது? என்றாவது தேடியதுண்டா?

நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.

கொஞ்சம் யோசித்தால், பள்ளியில்தான் நான் முதன் முதலில் மற்றவர்களுக்காக வரையத்தொடங்கினேன்.. ஆசிரியர்களுக்காக. நான் வரையவனவற்றின் மதிப்பு அவை பெறும் மதிப்பெண்களை விட அதிகம் எனக்கு.. ஒவ்வொருவருக்கும்தான்.
இப்படித்தான் வரைய வேண்டும் என்றில்லாமல், எப்படியும் வரையலாம் என்றிருந்த காலமது.
8 ம் வகுப்பு ஆ பிரிவில் கயல்விழியின் ரப்பர் வளையளோ, ஜியாமெண்ட்ரி பாக்சின் நீள் வட்டத்துளையோ, ஏதுமற்ற நேரங்களில் வெறும் கையோ போதுமானதாக இருந்தது கிளாமிடோமோனாசை வரைவதற்கு. அப்போதெல்லாம் கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி. வரைந்து முடித்த பின்,

”ஹை.. என்னோடதப் பாரு.. எப்படி இருக்குனு.. நல்லாருக்கா..?”

ஒவ்வொரு வகுப்பிலும்.. இந்த சம்பாஷனைகள் கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும்..

வகுப்பறைக்கு வெளியே ட்வீட்டியும் மிக்கி மௌசும் என் பால்ய நண்பர்கள். ஏராளமான முறை வரைந்திருக்கிறேன். தங்கமலரில் வரும் கிருஸ்துமஸ் தாத்தா, ஒரு வரி பிள்ளையார், காந்தி தாத்தா என அனைவரும் என் கைவண்ணத்திலிருந்து தப்பியதில்லை.

பள்ளியில் மிக எளிய கோட்டோவியங்களிலிருந்து கொஞ்சம் சிக்கலான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரையத்தொடங்கிய நாளில், என் நண்பர்கள் பலருக்கு வரைவதின் மீதிருந்த ஆர்வம் ஓரமாய் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதன் உச்சம் விலங்குசெல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அந்த சமயம் பெரும்பலானோர், பேப்பரில் பென்சில் கொண்டு கொத்து பரோட்டோ போடத் தொடங்கியிருக்க நான் மட்டும் கோலத்துக்கு புள்ளி வைப்பதாய் வைத்துக்கொண்டிருப்பேன். எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டு விட்டது அந்த ஆர்வம். நான் பெரிய ஓவியன் என்ற அவசரமுடிவுக்கெல்லாம் வரவேண்டாம். நான் வரைபவன். அது எப்படி வந்தாலும் விடாது வரைபவனாகத்தான் இருந்தேன். அது ஏதோ ஒரு வகையில் மனநிறைவைத் தந்தது.



கல்லூரிக்கு வந்த புதிதில், Engineering Drawing ஆஸ்பத்திரி சுத்தத்துடன் வரைதலை அணுகச் சொன்னது. ஒவ்வாரு மில்லி மீட்டரும் வரைதலின் அங்கம் என்றது. வரைந்தேன். அதுவும் கூட புதுவகையான ஆனந்தமாக இருந்தது. வரைவதற்கென்றே பிரத்யேகமான தயாரான தாள் , விதவிமான கருவிகள், உயரமான மேசை என புதுச்சீருடையில் பள்ளி செல்லும் குழந்தையின் குறுகுறுப்புடன் கடந்து சென்றன அந்த ஓவிய நாட்கள்.
முதலாமாண்டு கடந்த பின்னரும் கூட அவ்வப்போது, தூங்க வைக்கும் பேருரையாசிரியர்களின் வகுப்புகளில் நோட்டுப்புத்தகத்தில் ஏதேதோ வரைந்ததுண்டு.

ஆனால் இன்று வேலைக்கு வந்த பின் கடைசியாய் வரைந்தது எப்போது என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வரைதல் என் விருப்ப பொழுதுபோக்காக இருந்ததிலிருந்து, ஒரு தொழிற்பெயராய் மாறியது எப்போது என்று யோசித்தால் விடையில்லை.
ஒரு வேளை பால்யம் தொலைத்து சொந்தம் விட்டு, தேசம் விட்டு தூக்கம் தொலைத்து நாம் துரத்தும் நாணயச் சிதறல்களில் காணாமல் போயிருக்கலாம். எனக்கு வரைதல் போல உங்களிடமிருந்தும் கவனிக்கக் கூட அவகாசமின்றி ஏதாவதொன்று காணாமல் போயிருக்கக் கூடும். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தேடிப்பாருங்கள், தொலைத்த இடத்தை கடப்பதற்கு முன்..

பள்ளியில் என்னுடன் படித்த பழனிவேலுவுக்கு வினோதமானதொரு பழக்கமுண்டு. ஒவ்வொரு முறை சமூகஅறிவியல் பாடத்தில், பெருங்கடல்களைக் குறிக்கச்சொல்லி வரைபடங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், சமுத்திரங்களை குறித்து விட்டு, அவற்றில் கர்ம சிரத்தையாக மீன்களை வரைந்து கொண்டிருப்பான். பல முறை ஆசிரியர்கள் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவன் மாறவே இல்லை. கேட்டால்,

”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.

ம்ம்ம்...
இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.