Wednesday, October 31, 2007

தமிழில் எழுத Google-ன் மந்திரப்பக்கம்

வலைப்பதிவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை, தமிழில் தட்டச்சுவது. என்னதால் feel பண்ணி பக்கம் பக்கமா எழுதினாலும், கடைசியில் பதிவிடுவதற்குள் டாவு தீர்ந்துவிடும்.. ( தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு..)

இணையத்திலும் பலவித உதவிப்பக்கங்கள் அங்கங்கே உள்ளன. என்னதான் இருந்தாலும் தமிழில் நேரடியாக தட்டச்சும் சுலபம் (அ) செளகரியம் கிடைப்பதில்லை.

இப்போது, Google -ம் இந்த களத்தில் குதித்திருக்கிறது. Google ன் மற்ற படைப்புகள் போலவே, வாய் பிளக்க வைக்கிறது. புதுமையான ஒரு முயற்சி. இப்பக்கத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சி தமிழில் பெற முடியும். இதுதான் எல்லா இடத்திலும் இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் இல்லை..

இப்பக்கம், ஒவ்வொரு எழுத்தாக எழுத்துரு மாற்றுவதற்குப் பதில் ஒவ்வொரு வார்த்தையாக மாற்றுகிறது. ஒரு வார்த்தைளை எழுதிய பின் space அழுத்தினால் மந்திரம் மாதிரி முதல் வார்த்தை மாறுகிறது. மிகப்பெரிய செளகரியம், அம்மா என்று எழுத Amma, Ammaa என எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அகராதிச்சொற்கள் மட்டுமல்லாது, பெயர்சொற்கள் ஊர்ப்பெயர்கள் எனப் பலவித சொற்களையும் எழுத்துப்பிழையின்றி எழுதமுடியும்.
( எ.கா) Tanjavur, Thanjavur, Thanjavoor, Tanjaavur, Thnjavur <--( 'a' missing. note this) என எப்படி எழுதினாலும் தஞ்சாவூர் கிடைக்கும். இது போன்ற சிறிய வேறுபாடுகளை, தானாகவே கண்டறிந்து சரிசெய்து கொண்டு விடுகிறது.. உண்மையிலேயே வலைப்பதி்வர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். முயற்சித்துப் பாருங்களேன்..
http://www.google.com/transliterate/indic/Tamil

பி.கு:
தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாலம் ஆகிய மொழிகளிலும்
இப்பக்கத்தில் தட்டச்சலாம்.

Tuesday, October 23, 2007

சத்தம் போடாதே- ஒரு பார்வை




We don't see and define. We dfine and then see.
-யாரோ

வேறு எந்த விஷயத்தில் இல்லாவிட்டாலும், திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மையே...

பொதுவாக, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன், அதனைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனத்தை அறிய நான் முற்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் வாழ்வின் சுவாரஸ்யமே, அடுத்த நொடியின் ஆச்சரியத்தில்தான் அடங்கியிருக்கிறது. அந்த அரைநொடி சந்தோஷத்தை இழக்க விரும்பாதவன் நான். ஆனால், பல நேரங்களில் இது சாத்தியப்படுவதில்லைதான். எத்தனையோ ஊடகங்களின் வாயிலாக, படத்திற்கு போவதற்கு முன்பே அதனைப் பற்றிய ஒரு பிம்பம் நம் மனதில் பதிக்கப்பட்டு விடுகிறது. அதன் பின் படம் பார்க்கப் போனால், ஆறு வித்தியாசம் கண்டுபிடித்த கதைதான்.

ஒரு சில திரைப்படங்களே இப்பிம்பத்தை உடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான், 'சத்தம் போடாதே' வில் எனக்கு நேர்ந்தது.

வழக்கமான விமர்சனங்கள் போல், ஒரு பக்கத்திற்கு குறையாமல் கதை'சுருக்கம்' தந்து, காட்சிகளை அக்கக்காக பிரித்து அலசி ஆராய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், என் மனதில் பட்ட சில கருத்துக்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

நான் படத்திற்கு செல்லும் முன்பே, நண்பர்கள் வட்டத்திலிருந்து பலதரப்பட்ட அறிவுரைகள், விமர்சனங்கள் இன்ன பிறவும். "இருக்கும் வேலைப்பளுவுக்கு மத்தியில், கிடைக்கும் ஒரு வார இறுதியையும் வீணடித்து விடாதே" என்ற அளவுக்கு வந்தன. இருப்பினும், வஸந்த் படமாயிற்றே. அப்படி என்னதான் இருக்கிறது ஒரு முறை பாத்த்துதான் விடலாம் என்றுதான் சென்றேன்..

சுருங்கச் சொல்லின், ஒரு நல்ல திரைப்படம். சமீப காலங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் குத்துப்பாடல்கள் நிரம்பி வழியும் மசாலாப் படங்களுக்கு
இது எவ்வளவோ தேவலாம்.. அங்கங்கே தென்படும் சில அபத்தமான காட்சிளைத்தவிர( யாருமே இல்லாத காட்டில், எப்போதும் இஸ்திரி போட்டுக் கொண்டிருக்கும் அந்த இஸ்திரி கடைக்காரன் மாதிரி) மொத்தத்தில் நன்றாகவே இருக்கிறது.

படத்தில் மொத்தமே விரல் விட்டு எண்ணக் கூடிய கதாபாத்திரங்கள்தான். ஆனாலும், ஒரு நாடகத்தன்மை வராமல் படத்தை கொண்டு சென்றிருப்பதற்கு இயக்குனருக்கு சபாஷ் சொல்ல வேண்டும். வழக்கமான தமிழ் சினிமாவாக இருந்திருந்தால், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நிச்சயம் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றிருக்க வேண்டும். இறுதிக்காட்சியில் வரும் அந்த பாழடைத்த பங்களாவில், நாயகன் வில்லனை துரத்தி துரத்தி நையப்புடைத்தபின் (அல்லது வில்லனைக் கொன்ற பின்) படம் முடிந்திருக்கும்..

ஆனால், இவை எதுவும் இல்லாமல், ஹீரோயிஸத்தை முடிந்த அளவு குறைக்க சிரமப்பட்டிருக்கிறார் இயக்குனர். "பேசுகிறேன்.." பாடலும், விவாகரத்துக்குப் பின் நாயகியைக் கவர நாயகன் வகுக்கும் வியூகங்களும் ரசிக்க வைக்கின்றன..புதுமுக ஒளிப்பதிவாளராம்.(பெயர் மறந்து விட்டது) சிறப்பாகவே செய்திருக்கிறார். நா.முத்துக்குமார் யுவன் கூட்டணியின் பெயர் சொல்லும் படி இல்லை பாடல்கள்.(ஒன்றைத்தவிர).

இது போதுங்க. இன்னமும் தெரிஞ்சுக்க, நீங்களே தியேட்டருக்கு போய் ஒரு தடவை பாத்திட்டு வாங்க..

என் பரிந்துரை:: "நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்"

Tuesday, October 16, 2007

நான் ஏன் எழுதுகிறேன்..? ஜெயகாந்தன்

எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.
எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.
எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.
வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.
ஜெயகாந்தனின் வானொலி உரை- ஜீலை-5- 1971

இப்படிச்சொன்ன ஜெயகாந்தன்தான் பின்பொருமுறை, "நீங்கள் ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை?" என்று கேட்டதற்கு,
"நான் விரும்புவதை எழுதுவதற்கு எனக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ, அதே அளவு சுதந்திரம் எழுதாமல் இருப்பதற்கும் உள்ளது" என்றார்..

என்ன ஒரு விசித்திரமான பதில்..! அவருடைய கதாபாத்திரங்களின் சாயல், அவர் மூலம் அடிக்கடி வெளிப்படுவதைக் காணலாம். அல்லது எதிர்த்திசையில் , அவரது குணாதிசியங்கள் அவரின் கதாபாத்திரங்களின் மீது படிந்திருப்பதாகவும் கொள்ளலாம். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கங்காவாகட்டும் 'யுகசந்தி'யின் கெளரிப்பாட்டியாகட்டும், ஏதோ ஒரு விதத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரின் சாயல் தென்படும்.

அவர் தேர்தலிலும் ஒரு முறை போட்டியிட்டிருக்கிறார், தி.நகர் தொகுதியில். அதில் அவர் பெற்ற வாக்குகள் 200க்கும் குறைவே. எதற்காக தேர்தலில் நின்றார்? தெரியாது.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் "என்னை நம்பி வாக்களித்த அனைவருக்கும் நன்றி" என்ற அறிக்கையும் கூடவே வந்தது.

அவருடைய பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் தென்படுவது போன்ற 'ஸ்திரபுத்தி'யில்லாத தன்மையா? அல்லது, நான் நினைத்ததை நான் செய்கிறேன் என்ற தன்னிறைவா இது.? தெரியாது..

இவை எல்லாவற்றையும் கடந்து, என் மனதைக்கவர்ந்த எழுத்தாளர் அவர்.. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் 'கர்வம்'. தான் ஒரு எழுத்தாளன் என்ற கர்வம்.. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அந்த ஞானச்செருக்கே அவரின் அடையாளம்.

பாரதீய ஞானபீட தேர்வுக்குழுவினர் சொன்னது...
"தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு அவரது பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது. "
உண்மைதான்...

Saturday, October 06, 2007

அவளைப் போல் ஒரு கவிதை..!

பழனிபாரதியின் 'மழைப்பெண்' கவிதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை ஒன்றுண்டு.

அது,

"ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு
ஆணும் போதாது காதலுக்கு..
நிலா வேண்டும், மழைவேண்டும்,
மீன் வேண்டும், காடு வேண்டும்,
தும்பி வேண்டும், மழலை வேண்டும்,
மண்புழு வேண்டும்,
கவிதை வேண்டும்.. "

காதல் கவிதைகள் என்றால் கவிஞர்கள் செய்த காலவிரயம் என்று எண்ணியிருந்த எனக்கு மாற்றுக்கருத்து ஏற்பட உதவிய கவிதைகளில் இதுவும் ஒன்று.( இன்னும் பல உண்டு. அவற்றை பிறகு பார்க்கலாம்)


ஆனால், ஒன்று நிச்சயம். நானும் கொஞ்சம் காதல் எழுதவேண்டும் என்ற ஆவல் துளிர்விட்டது. இதோ நான் எழுதிய கொஞ்சம், இங்கே..

காதல் வந்தாலே, உலகியல் வரையறைகள் தகர்ந்து போவது சகஜம்தான். கவிதையும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எழுதியதை கவிதைகள் என்று சொல்லமாட்டேன். காதல் பித்தில், சில பிதற்றல்கள்.. அவ்வளவே.. !! காதலின் தீண்டல் கண்டவர்களுக்கு இவை சுவைக்கலாம்..!!!

கவிதையை படங்களுடன் காண, இங்கே செல்லவும்..

  • பாடுபொருளாய்
    காதலைக் கொள்வேனென
    கனவிலும் நினைக்கவில்லை.
    நீ
    வந்தாய்..!
  • -------
  • உன்னில் பிறக்கும்
    கவிதைகளின்
    வளர்ப்புத்தாய்
    நான்..!
  • -------
  • என் கவிதைகளுக்கு
    முதலும் முடிவும்
    ஒரே புள்ளிதான்,
    முடிவிலியைப் போல,
    நீ..!
  • -------
  • எத்தனை அலை
    வந்து சொல்லிச்சென்ற
    பின்னும்,
    மிச்சமிருக்கின்றன
    கடலைப்பற்றிய கதைகள்,
    உன்னைப் பற்றிய
    என் கவிதைகளும்...
  • -------
  • நம்மில் அல்ல,
    நமக்கிடையே
    நிரம்பியிருக்கிறது,
    காதல்..!
  • -------
  • எழுதாமல் விட்ட வரிகள்தான்
    அதிகம் சொல்கின்றன..
    என் காதலை.. !
  • -------
  • தேவதைக் கதைகளை
    கேட்டதில்லை நான்..
    ....
    பார்த்திருக்கிறேன்..!
  • -------
  • என் கவிதைகளை
    அர்த்தமிழக்கச்செய்யும்
    அகராதி
    நீ..!
  • -------

Wednesday, October 03, 2007

படித்ததில் பிடித்தது (1)


அதை நான்
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்.
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத்தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்




-மு. மேத்தா

(ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

Tuesday, July 31, 2007

படம் பார்த்து பதில் சொல்லுங்க..

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம் என் கருத்தைக் கவர்ந்தது.. உங்கள் பார்வைக்கு.... கீழே இருக்கும் புகைப்படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்..



இது தொழிலதிபர் டாடா அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வந்த ஒரு ஓவியம். இதில் ஒளிந்திருப்பது என்ன என்று தெரிகிறதா.? கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய சபாஷ்..

Saturday, June 30, 2007

என் அறையில் தொலைத்த என் வாசனை


கல்லூரி விடுதிகளில்
களைப்பாறுவதற்கென்றே
வந்து தங்கிவிடுகின்றன
சில வாசனைகள்

உருவமற்று உருவம் பெறும்
ஒரு அமீபாவைப் போல்
ஒவ்வொரு அறையிலும்
ஒரு விதமாய் ஒரு நிறமாய்
ஒரு குணமாய்
உருவம் பெறுகின்றன

முதன் முதலாய்
என் அறையில்
அடியெடுத்து வைத்த அன்று
உணரவில்லை

என்று இந்த வாசம்
உருவானதென்றும் தெளிவில்லை

ஆனாலும் ஒரு நாள்
உருவம் பெற்று விட்டது...

எப்படி வந்ததிது?

பழமையின் வாசனையுடன்
புது சுண்ணாம்பின் வாசனை,
நான் பயன்படுத்தும் ஷேவிங்லோசன்,
பயன்படுத்தாமல் தூக்கிப்போட்ட
பால்பாயிண்ட் பேனா,
இன்று வாங்கிய சாக்லேட்,
உலர வைத்த துணியின் வாசம்,
என அனைத்தும் சேர்த்துப் பிசைந்த
ஒரு விசித்திரமான கலவை அது.

அந்த வாசம்
அறைக்கு அறை வேறுபடுவதை
உணர்ந்திருக்கிறேன்.
அது வெறும் வாசமல்ல.

வாசம் செய்யும் மனிதனின் வாசம்.
அவன் குணங்களின் வாசம்.
நுகர்தலுக்கு ஒரு பரிமாணம்
என்று யார் சொன்னது?
பல பரிமாண பிம்பம் காட்டும்
கண்ணாடி அது

நான்காண்டுகளின் முடிவில்
பாலை நிலத்தை நினைவு படுத்தும்
ஒரு மே மாதத்தில்
அந்த பிரிதல் நடந்தது.
உடமைகளாய் உடன் இருந்தவை
அனைத்தையும்
கவனமுடன் பைகளில் கட்டி
வீட்டுக்கு வந்து பார்த்த போது
தொலைந்து போனவை பட்டியலில்
அந்த வாசமும் சேர்ந்துகொண்டது.

அதன் பின் வருடங்கள் மட்டும்
வந்து செல்கின்றன

துரித உணவகங்கள் மணக்கும்
சாலையோரங்களில்,
நகரத்தின் நெரிசல் மிகுந்த
நாளங்காடிகளில்,
புகைவண்டிப்பயனத்தில்,
புதிதாய் வாங்கிய
நோட்டுப்புத்தகத்தில்,
என் அலுவலக
வரவேற்பறையில்,
குளிர்பதனப் பெட்டியில்
என இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்

என் அறையில் தொலைத்த
என் வாசனையை.

Thursday, May 10, 2007

இஞ்சி இடுப்பழகி..?


தேவர்மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலைக் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.. ஆனால் இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?


உருவகம் பண்ண எவ்வளவோ இருக்கும் போது, கவிஞர் இஞ்சியை எடுத்துக்கொண்டதேன்..?


கொஞ்சம் உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டு ஒரு பதில் சொல்லுங்களேன்.. ஒரு சுவையான பதில் என்னிடம் உண்டு.. அதை விட சுவையான பல பதில்கள் கிடைக்குமென நம்புகிறேன்.. பார்க்கலாம்.. :-)

Tuesday, May 01, 2007

சரித்திரம் பேசட்டும்...



நான் வெற்றியென்று வெறிகொண்டு அலைந்தவர்களில் ஒருவன்
எது வெற்றி? கேள்வியில் கரைந்தவர்களில் முதல்வன்
அலையாத ஊருமில்லை!! தேடாத தேசமில்லை!!!

வெற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி காட்சி தந்திருக்கிறது.
ஒரு சிலருக்கு வெற்றி எனும் சொல்லின் பொருள்
கல்விச்சாலையிலேயே முடிந்து போகிறது - இன்னும் சிலருக்கு
பணம் புகழ் பெண் செல்வம் என படிப்படியாக நீள
கடைசியில் ஒருவன் சொன்னான்

“உன்னுடைய வெற்றியை உன்னைத்தவிர
வேறு யாரால் தீர்மானிக்க முடியும்??"
இமயமலையின் உச்சிக்கே சென்றாலும் அது வெற்றியல்ல
உன் கண்களில் இருப்பது ஆகாயமென்றால்..

நானும் முடிவெடுத்தேன்
எனக்கு எல்லைகளற்ற ஒரு தேசம் வேண்டும்.
மன்னவன் எண்ணத்திற்கு மறுப்பேது?
அன்றைக்கே பட்டறைகளில் பொறி பறந்தது..

பார்சிறுக்கும் படைதிரட்டி பெரும்போர் தொடுத்தேன்
எதிர்த்தவர் தலைகளை
என் யானைகளுக்குக் கால்பந்தாடக் கொடுத்தேன்
மிச்சமின்றி துவம்சம் செய்து வெற்றி வாகை சூடினேன்


என் பாவங்களுடன் சேர்த்து
என் தேசத்து எல்லையும் விரிந்தது

* * * * * * * * *

"நாடு கடத்துங்கள் இவனை..!"
ஒருநாள் அனிச்சையாய் ஆணையிட்ட போதுதான்
கடத்துவதற்கு நாடே இல்லையென பதில்வந்தது

நாடு என்பது நிலத்துக்கல்ல; மனிதர்களுக்கு
பாதி பேரை நான் கொன்றேன்; மீதி பேரை போர் கொன்றது
இப்படி இருக்கையில் எப்படி இருக்கும் இனி நாடுகள்?

வெற்றிக்கு நான் தந்த வரையறை தவறோ?
முதன் முறையாக
கடந்து வந்த பாதை மீது சந்தேகம் வந்தது..
இழுக்கெனத் தெரிந்தும் துணிந்தபின் எண்ணினேன்..

நான் ஒருவன் வாகைப்பூ சூடுவதற்காக
ஆயிரமாயிரம் பெண்டிர் பூவிழந்தனர் என்பது
ஏன் எனக்குத் தெரியவில்லை?
நான் செய்த தவறுக்கு பூக்களுக்கும் ஏன் தண்டனை?
முடிவில் வெற்றியும்தான் எவ்வளவு சோகமானது..!

மனதில் ஒரு மின்னல்..
நீ முடிவென்று நினைக்கும் வரை எதுவும் முடிவல்ல
தற்கொலை என்பது எதிரியைக் கண்டு பயந்த
கோழையின் சவப்பெட்டி
பராக்கிரமம் பாடும் ஆயிரம் அடைமொழிகளும்
அதைவிட அதிகமாய் விழுப்புண்களும் சுமந்தவன் நான்.
எனக்கான முடிவு இதுவல்ல..
அதனை நானே தேடிக்கொள்கிறேன்..
மனதின் ஒரு ஓரம் மீண்டும் சொன்னது
-“என்றும் எனக்கு எல்லைகள் இல்லை”

Saturday, April 28, 2007

கண் கட்டா வித்தை

எத்தனையோ குழு நடனங்களை மேடைகளில் கண்டிருப்போம்.. ஆனால் சமீபத்தில் இணையத்தில் நான் கண்ட ஒரு காட்சிப்பதிவு என்னை பிரமிக்க வைத்தது.. மனிதர்களை கொண்டு செய்யப்படும் HUMAN ART எனப்படும் வடிவ வித்தைகளில் இவ்வளவு விஷயங்கள் சாத்தியமா..? சந்தேகமிருந்தால் கீழே சொடுக்கவும்..