Tuesday, January 12, 2010

துளி விஷம்

கோபம் கொள்ள முடியா
நபர்கள் மீது
கோபம் கொள்ளும் நேரங்களில்
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்
ஜீவராசிகளனைத்தும்
அவனாகவே உருக்கொள்கின்றன

நீ, அவன், அவள் என்று அதற்கு
பேதமில்லை

சின்ன பென்சில் கூட
கொலைக்கருவியாகிறது

குறைந்தபட்ச தண்டனையாய்
மரணதண்டனை அளித்து
கூர் உடைக்கிறேன்

கருவிகளில்லா நேரங்களில்
வெறும் கையே
போதுமானதாயிருக்கிறது

கையில் படியும் இரத்தக்கறை
இரசிக்கையில்
என்னையுமறியாமல்
முளைத்துவிடுகின்றன
இரு கோரைப்பற்கள்

தெருவில் கலவிசெய்யும் நாயை
கல்லெடுத்து எறிகிறேன்
அந்த நாயாய் என்னை
ஒருவன் சொல்லால் அடித்தது
கல்லாய் பறக்கிறது

வீட்டில் நுழைந்து காலணி விடுகையில்
குதித்தோடும் கரப்பானை
துரத்திச் சென்று மிதிக்கையில்
வாயொழுகும் இரத்தம் சுவைக்கிறது

ஆற்றாமை, கோபம், காழ்ப்பு
எந்த கோப்பையிலிருந்தாலும்
விஷம் ஒன்றுதானே..!

சாக்ரடீசாக விரும்பியே
பருகுகிறேன்
ஒவ்வொரு துளியையும்