Thursday, April 26, 2007

முள் இழந்த கடிகாரம்


சூரியன் உதித்தது
வானம் கிழித்து மேலேறி
மெதுவாய் ஊர்ந்தது
பூமியுடன்
பேச்சுவார்த்தை நடத்தும்
காலத்தின் தூதுவன்

காலம் -
ஒரு அதிசய ராட்சசன்
அவன் பயணம்
மிக விசித்திரமானது

யாருக்காகவும்
அவன் நிற்பதில்லை.
அவனுக்கென்று ஒரு வழி.
ஒரே வழி.
வழியெங்கும் அவன்
மென்று துப்பிய எச்சில்கள்
சரித்திரமாய்…

ஒரே வட்டத்திற்குள்
யுகம் யுகமாய்ச் சுற்றியும்
அவன் இன்னும் ஓயவில்லை.

* * * * * *

ஒருநாள் என் வீட்டில்
ஆணியடித்து மாட்டினேன்
ஒரு கடிகாரத்தையும்
சில நம்பிக்கைகளையும்

அந்த கடிகாரத்திற்குப்-
பெருமை தாங்கவில்லை.
ஒவ்வொரு நாளும்
காலம் தன்னில் முகம்பார்ப்பதால்தான்
பூமிப்பந்து சுழல்கிறதென
அதற்கொரு எண்ணம்.

மணிக்கொருதரம் என்னைக் கூப்பிட்டுத்-
தன்பெருமை பாடும்..

ஆயிரம் முறை கடந்தும்
அலுக்காமல் கேட்டேன்
அதன் நம்பிக்கையை..
இரவிலும் கூட விடுவதில்லை.

* * * * * *

அன்றொருநாள் அவதானித்தேன்
காலத்திற்கும் கடிகாரத்திற்கும்
இடையில் நடப்பது
ஒரு போட்டி,
முடிவிலிக்குச் செல்வது
யார் என…

ஒருவரை ஒருவர்
துரத்தியபடி தொடர்ந்து
ஓடிக்கொண்டிருந்தனர்
இருவரும்.

அந்த ராட்சசன் விடுவதாய் இல்லை.
ஒரு நாள், காற்றில் ஏறி
அரூபமாய் வந்தான்.

நான் உறங்கிக்கொண்டிருந்த
அந்த பின்னிரவில்,
அவனுக்கும் என் கடிகாரத்திற்கும்
நடந்த யுத்தத்தில்
அவனால் வீழ்த்த முடிந்தது
கடிகாரத்தை மட்டுமே..
மிச்சமிருந்தன நம்பிக்கைகள்.

துடித்தெழுந்து தரைநோக்கினேன்...
முள் இழந்த கடிகாரம்.

ஒரு மணி முடிந்தது,
பாடல் இல்லை..
இரண்டு… மூன்று.. நான்கு…
இல்லை.

காலம் உறைந்திருக்குமோ?
விழிகசக்கிக் காத்திருந்தேன்.
மறுநாளும் வந்தது.
வரவில்லை சூரியன்.

2 comments:

Anonymous said...

Nice poem .....

Anonymous said...

romba nalla irukku... :-) :-)purinjudhu nu nenachen kadasiyila puriyala ;-)