Monday, June 20, 2011

அவனும் இவனும்

Disclaimer: இது அவன் இவன் விமரசனம் அல்ல. விமர்சனம் தேடி வந்தவர்கள் இப்போதே தப்பித்துக்கொள்ளலாம். :)

நீண்ட நாட்களுக்குப் பின் தியேட்டர் சென்று படம் பார்ப்பதென முடிவான பிறகு, ஆரண்ய காண்டம் பார்க்கலாம் என்றானது. ஆகா ஓகோ வென நண்பர்களும் உசுப்பேற்ற, நானும் இரு நண்பர்களும் ஒரு வழியாக படத்தின டிரெய்லர் பார்த்து படத்துக்கு தயாராகி படம் எங்கு ஓடுகிறது என்று தேடினால், எங்குமே இல்லை என்று பல்லிளித்தார் கூகிலாண்டவர். படம் வந்து ஒரு வாரம்தானே ஆகிறது.. என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று மீண்டும் சளைக்காமல் தேடியதில், nowrunning.com மட்டும் இந்த படம் ஒரு டப்பா தியேட்டரில் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதாக பாலை வார்த்தது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவர்கள் மாதிரி ஜோராக கிளம்பி 30 நிமிடங்கள் முன்னதாகவே தியேட்டருக்கு சென்றால், பார்க்கிங்கிலேயே

”மலையாளமா?” என்று கர்ண கடூரமான குரலில் குச்சியை நீட்டினார் பார்க்கிங் ஆசாமி..

பொதுவாக தமிழ்நாட்டுக்கும் கர்னாடகத்தும்தானே பிரச்சனை வரும்.. இப்ப இவர் கேட்கிற தொனியைப் பார்த்தால், கேரளாவுக்கும் பிரச்சனையா.. நல்லவேளையாக நான் இப்போது கேரளா இல்லை என்பது சந்தோசம் என்றாலும், பயத்தை விழுங்கியபடி

”தமிழ்நாடு” என்றேன்..

”அக்கட ரண்டி.. அக்கட ரண்டி” என்று அருகிலிருந்த மற்றொரு தியேட்டரை நோக்கி கை காட்டினார்..

இது என்ன புது அநியாயமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்தால் இங்கு படம் பார்கமுடியாதா என்று மேலும் விசாரித்ததில், நேற்றே படம் மாறிவிட்டதாம். இப்போது ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது. . ஆண்டவா. .

தியேட்டர் முன் அப்படத்தின் ஃப்ளெக்ஸ் பேனரில், மார்வரை பாவாடை ஏற்றிக்கட்டிய மங்கை அனைவரையும் வருக வருக என்று வரவேற்றுக்கொண்டிருந்தார். .

இது வரை தியேட்டரில் மலையாளப்படமே பார்த்ததில்லையே என்று எழுந்த குற்றவுணர்ச்சியையும் ஓரங்கட்டி, பார்த்தால் தமிழ்ப்படவே பார்ப்பதென சூளுரைத்து அருகிலிருந்த தியேட்டருக்கு சென்றால், அங்கு காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி. அங்கு ஆரண்ய காண்டத்திற்கு பதிலாக அவனும் இவனும் எங்களைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர்.

அவன் இவன் ஆ என்று நண்பர்களிருவரும் பின்வாங்க,

இவ்வளவு தூரம் பெட்ரோலை புகைத்து வந்த ஒரே காரணத்துக்காகவாவது இந்த படம் பார்த்துவிட்டு போகலாம் என்று முண்டியடித்து டிக்கெட்டும் வாங்கினால், படம் தொடங்குவதற்கு 5 நிமிடம் முன்பாகத்தான் உள்ளே விடுவோம் என்று சங்கிலியைப்போட்டு இறுக பூட்டியிருந்தனர். அதற்கு இன்னும் பத்து நிமிடம் இருக்கிறதே என்று அக்கம் பக்கம் நோட்டம் விட்டதில் நிறைய பேர் குடும்பம் சகிதமாக பிள்ளை குட்டிகளுடன் வந்திருந்தனர். ஜீன்ஸ் கூலிங்கிளாஸ் சகிதமாக பீட்டர் மங்கைகளையும் காணமுடிந்தது. இவர்களுக்கு இன்னமும் பாலா மேல் இருக்கும் நம்பிக்கையா, இல்லை என்னைப் போல் ஏமாந்த சோனகிரிகளா என்று எழுந்த சந்தேகத்தையும் பொறுத்துக்கொண்டு காத்திருந்தோம். பூட்டு திறக்கும் போதுதான் தெரிய வந்தது, டிக்கெட்டில் போட்டிருக்கும் இருக்கை எண்கலெல்லாம் சும்மா உல்லுலாயிக்கு. உள்ளே நுழைந்ததும் உங்கள் கபடியாடும் திறமைக்கேற்ப ஒரு இருக்கையை பட்டாபோட்டுக்கொள்ளலாம். . கிட்டத்தட்ட மன்னன் பட ரஜினி ரேன்ஞ்சுக்குத்தான் உள்ளே நுழைய முடிந்தது.

இதெல்லாம் சரி.. படம் என்னவானதா? வேண்டாம்.. குறை சொல்வது ரொம்பவும் சுலபம். அது நிறைய சொல்லலாம். முதல் பாதி என்னால் கொஞ்சமும் ஒன்றமுடியவில்லை. ரொம்ப செயற்கையாகத் தெரிந்தது பல இடங்களில். படத்தில் எனக்குப் பிடித்த இரு விஷயங்கள் மட்டும்..

முதலாவது.. பாலாவின் ட்ரேட் மார்க் பாத்திரங்கள்.. இது வரை நீங்கள் சந்தித்திராத கதாபாத்திரங்களை அவளர்களின் வாழ்விடங்களிலேயே ஒப்பனைகளின்றி காணலாம். . இப்படி குற்றப்பரம்பரையைப் பற்றி தமிழில் வேறேதும் படம் வந்திருக்கிறதா எனத்தெரியவில்லை. அப்புறம் அந்த கமுதிக்கோட்டை ஜமீன்.. சுதந்திர இந்தியாவிடம் ஜமீனை பறிகொடுத்துவிட்டு வறட்டு ஜம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் பாத்திரமும் கச்சிதம்.. அப்புறம் அந்த சிறுவன்.. எதுவுமே பேசாவிட்டாலும், அவர்களின் குடியிருப்பின் வாயிலில் அபாய மணியடிக்கும் கிழவன்.. இன்னும் இன்னும்.. இவர்களையெல்லாம் திரையில் கொண்டுவர பாலாவால் மட்டுமே முடியும்.

அடுத்து ஜமீன்தாரின் நடிப்பும், அவருக்கும் அந்த சிறுவனுக்கும் இடையிலான உறவும் எனக்கு பிடித்திருந்தது. பாசாங்குகள் இன்று உறவுகளை காட்சிப்படுத்திய பாலா, நாயகர்கள் என்றாலே ஒரு நாயகி தேவை என்கிற ஆலம் ஆரா கால ஃபார்முலாவின் சறுக்கியிருப்பது உறுத்துகிறது.

பெரிதும் எதிர்பார்த்த ”ஒரு மலையோரம்” பாடல் படத்தில் வரவே இல்லை. L

படத்திற்கு செல்லும் முன், இது ஒரு காமெடி படமென்று யாரோ சொன்னதாக நினைவு. அது யாரென்று இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்..

பாலா படத்திற்கெல்லம் genre சொல்லவது ரொம்பவே கஷ்டம். இது பாலா படம் அவ்வளவுதான். நான் கடவுளும் பிதா மகனும் உங்களுக்கு மிகப்பிடித்த படங்கள் என்றால், இதுவும் பிடிக்கக்கூடும். அதற்கு மேல் உங்களின் ஊழ்வினை.

Moral of the story: கூகிலாண்டவர் (பெரும்பாலும்) பொய் சொல்ல மாட்டார். :P

4 comments:

ரெஜோ said...

MR.Bala en thirunthave maatengaraar ?? Pithamaganukkum , avan ivanukkum 6 vithyaasam sollen paarppom .. :-(

U forgot to mention abt Vishal ...

Sara's World said...

Ipa enna solla vara bala??? parkalama vendama??

Bee'morgan said...

@ரெஜோ.. 6 வித்தியாசமா..? கொஞ்சம் கஷ்டம்தான்.. :P

yup.. Vishal s performance was really good.. evlo panni enna.. padam oothikitta enna panrathu..

Bee'morgan said...

@Sara..: Escaaaaaape.. :) innum konja naal la TV la podum bothu paththukko..