Sunday, July 10, 2011

மோகமுள்

பாண்டுவின் செல்வனே! சத்துவ குணத்தின் போக்கு ஒளிமயமாகவும் ரஜோ குணத்தின் போக்கு காரியத்தில் ஈடுபாடாகவும், தமோ குணத்தின் போக்கு மோகமாகவும் வெளிப்படும்போது அவைகளை அவ்விவேகி வெறுப்பதில்லை. வெளிப்படாதிருக்கும் போது இவைகளுக்காக ஆசைப்படுவதுமில்லை. இக்குணங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பார். இக்குணங்ககளால் பாதிக்கப்பட்டாலும் இருப்பார்.மேலும் குணங்களே தம்மை வெளிப்படுத்திக் கொண்டும் செயல்படுத்திக் கொண்டும் இருப்பதை உணர்கிறார்.தம் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்.தாமாக எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்கிறார்.

- கண்ணன்

நீண்ட நாட்களாகவே வாசிக்க நினைத்திருந்த புதினம். வாசிக்கத்தொடங்கிய பிறகு, நான் நினைத்த மாதிரியெல்லாம் பக்கங்களை நாலுகால் பாய்ச்சலில் தாண்டிவிட முடியவில்லை. மிக நிதானமாக மிக மிக நிதானமாக ஏறக்குறைய சில மாதங்கள் கடந்து இன்று மாலைதான் படித்துமுடித்திருக்கிறேன்.

இப்போது என்ன நினைக்கிறேன் என்று என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பனொருவனை இனி பல காலத்திற்கு சந்திக்க முடியாது என்று தெரிந்தே, இரயில்நிலையத்தில் வழியனுப்பிவிட்டு திரும்பி வருவது போல் உணர்கிறேன்.

கதையைப் பற்றி நான் எதுவுமே சொல்லப்போவதில்லை. இப்படைப்பிற்கு, ஏன் எந்தவொரு நல்ல படைப்புமே கதை என்கிற கட்டத்தை கடந்து ஒரு அனுபவமாக பரிணமித்துக்கொள்கிறது. அந்த அனுபவம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இடையே வேறுபட்டாலும், அது தனித்துவமான ஒரு அனுபவம்தான். அதை அனுபவித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. பதிவின் எழுத்து வசதிக்காக இங்கு கதையென்றே கொள்வோம்.

கதையின் களன் புழங்கும் பகுதி, கும்பகோணமும் பாபநாசமும் இரண்டாம் பாதியில் சென்னை. ஆனையடியும் கும்பேச்வரன் கோவிலும் பாபநாசமுமும் குடமுருட்டி ஆறும் நான் பார்த்துப் பழகிய இடங்கள் என்பதாலோ என்னவோ மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். அதிலும் காட்சிகளை அதன் ஒலிக்குறிப்புகளுடன் வர்ணிப்பதில் தி.ஜா தி.ஜாதான். குடமுருட்டி ஆற்றின் இரவில் பாபுவுக்கு வைத்தி மந்திரம் சொல்லும் அந்த காட்சி ஒரு சோறு.

வார்த்தைகளில் இதெல்லாம் சாத்தியமா? இசையை வார்த்தைகளில் வடிக்கமுடியாது.. ஆனால், இசையென்னும் அனுபவத்தை வார்த்தைகளில் கொண்டுவந்தால் இப்படித்தான் இருக்குமோ? இருக்கக்கூடும். இசை மட்டுமல்ல அறுபது ஆண்டுகளுக்கு முந்திய கும்பகோணமும் நம் கண்முன் விரிகிறது. காவிரியோரத்து மாடியறையும், பூங்காவும் துக்காம்பாளையத்தெருவும் இதோ தொட்டுவிடும் தூரத்தில் ஜாலம் காட்டுகின்றன.

அதைவிட முக்கியமான விஷயம், அறுபது ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு துணிச்சலான கதையை வடிப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அன்று என்ன இன்றும் கூட இது விவாததுக்குரிய கருதான். மனித மனத்தின் சில இயல்புகள் என்றும் மாறுவதில்லை. அல்லது மாறுவதற்கு மிக அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. கயிற்றின் மேல் சாகசம் காட்டுபவனைப் போல ஒரு புறம் இசையையும் ஒரு புறம் இச்சையையும் வைத்து மிக லாவகமாக பயணித்துக்காட்டியிருக்கிறார் தி.ஜா.

”மோகம் மனிதனை ஆட்டிவைக்கிறது” என்பது ஒரு statement. ஒரு உலகப்பொது உண்மை. இதனைப்பேசாத மதங்கள் இல்லை. சில மதங்கள் அரவணைத்துக்கொள்கின்றன. சில கூடவே கூடாது என்கின்றன. ஆனால், நாம் ஞானியல்ல. வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் சாதாரண மனிதனுக்குண்டான சுக துக்கங்களுடன் மோகத்தையும் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. இந்த ஒரு வரிக்கு உயிரும் உணர்வும் கலந்து கூடவே இசையையும் சேர்த்துப் பிசைந்து மறக்கமுடியாத ஒரு அனுவமாக ரசவாதம் காட்டியிருக்கிறார் தி.ஜா. எந்தவொரு காட்சியும் இலக்கில்லாமல் எங்கோ இட்டுச்செல்வதாக உணரமுடியாது. பக்கங்கள் கடக்க கடக்க நமக்கும் மிகப்பரிச்சமான ஒருவர்களாக ஆகிவிடுகின்றனர் அனைவருமே.

அறுநூற்று சொச்ச பக்கங்களில் பல ஆயிரம் வார்த்தைகளில் எழுப்பிககட்டிய கோட்டை கடைசியில் ”இதற்குத்தானா?” என்ற ஒற்றை கேள்வியில் உடைந்து நொறுங்கும் போது, வாழ்க்கையின் அபத்தங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீள் பரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது.

யமுனாவும் ரங்கண்ணாவும் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப்போயினர். எனக்கு இந்த உலகில் இசைமட்டும் போதும் என்கிற ரங்கண்ணா, நான் எதையும் எதிர்கொள்வேன் என்கிற யமுனா, இவர்களை சிறுபிள்ளைத்தனமாக சித்தரித்து அவமதிக்கவிரும்பவில்லை நான். ஆசிரியரின் வார்த்தைகளில் நீங்களே உணர்ந்து கொள்ள,

------------
மோகமுள்,
தி. ஜானகிராமன்,
ஐந்திணைப்பதிப்பகம்
ரூ. 300
இணையத்தில் இங்கே கிடைக்கும்.
-------------

புத்தகத்தை மூடிவைத்த பிறகும் விடாமல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த ஒற்றைக்கேள்வி.

புத்தகத்தில் மோகமுள்.

5 comments:

ரெஜோ said...

Feel to read the book again :-) :-(

Bee'morgan said...

தப்பில்லை.. இன்னொரு தடவை படிக்கலாம்.. :P

ஜடாயு said...

திஜா எழுத்துக்கள், குறிப்பாக மோகமுள் தரும் அனுபவம் அலாதியானது. தஞ்சைச் சீமையுடன் தொடர்பில்லாத எனக்கே அந்த எழுத்து ரசவாதம் புரியும்போது, அந்த மண்ணுடன் பிணைந்த உங்களுக்கு, கேட்கவே வேண்டாம்.

வாசக அனுபவத்தை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் பாலமுருகன்.

தி.ஜாவின் நடந்தாய் வாழி காவேரி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எழுதப் பட்ட சிறந்த பயண இலக்கிய நூல்களில் ஒன்று.

Bee'morgan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜடாயு அவர்களே..!

நடந்தாய் வாழி காவேரி இன்னும் படித்ததில்லை. விருப்பப்பட்டியலில் இணைத்துக்கொள்கிறேன்.. :)

J S Gnanasekar said...

அடிக்கடி எழுதுங்கப்பா...