Monday, May 03, 2010

இடமாறு தோற்றப்பிழை

யாருமற்ற பெருவெளியில்
பஞ்சுப்பொதி சுமந்தபடி
ஊர்ந்துகொண்டிருந்த யானை,

நான்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
உடல் குறுக்கி, துதிக்கை உயர்த்தி
ஒரு கோபுரமாய்ச் சமைந்தது

அந்த யானையின் படைப்பில்
என் பங்களிப்பும்
உண்டெனினும்,

அது காணாமல் போனதைப் பற்றிய
சஞ்சலங்கள் ஏதுமில்லை
என்னிடம்

புதிதாய் முளைத்த
கோபுரம் ஏற்படுத்திய
கிளர்ச்சி மட்டுமே

கல்பகாலமல்ல
கால் நிமிடம்தான்

கல்விழுந்த குளமென
சிறிய சலசலப்பில்
கோபுரம் சரிந்துவிழுந்து
தவழும் குழந்தையானது

அம்மாவிடம் அடம்பிடித்தும்
கிடைக்காத ஐஸ்க்ரீம்
ஆசையுடன் நான் நட்ட
பூச்செடி
சாகசங்கள் புரியும்
இரும்புக்கை மாயாவி

என் மனதுக்கு நெருக்கமான
அத்தனையாகவும் உருக்கொண்ட
அந்த மாயக்கம்பளம்
வெறும் வெண்மேகமென
உணர்ந்த ஒரு நாளில்
நான் வளர்ந்துவிட்டிருந்தேன்

Monday, April 26, 2010

இருத்தல்




சோப்புக்குமிழ்கள் ஊதி விளையாடும்
சிறுபிள்ளையாய்
உன் பார்வைகளை விசிறிச்செல்கிறாய்

ஒவ்வொரு குமிழும் என் உலகையே
பிரதிபலித்தபடி யாருக்காகவுமில்லாமல்
மிதந்து கொண்டிருந்தது

விரும்பி விரும்பிச்சென்று
குமிழ்களை தொடவிரும்பும் சிறுவனாய்
இலக்கற்றலையும் உன் பார்வைப்புலத்தில்
பட்டுவிடத் தவிக்கிறேன் நான்

என்செய்வேன்,
விரல்தொடும் அக்கணமே குமிழுடைந்து
என் உலகமும் சிதறுகிறது

இன்னும் சிலமுறை குமிழ்களை
இழந்தபின்தான் புரிகிறது

என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
உன் பார்வையில் இருப்பதனால்தான்
இன்னும் இருந்துகொண்டிருக்கிறது

Tuesday, January 12, 2010

துளி விஷம்

கோபம் கொள்ள முடியா
நபர்கள் மீது
கோபம் கொள்ளும் நேரங்களில்
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்
ஜீவராசிகளனைத்தும்
அவனாகவே உருக்கொள்கின்றன

நீ, அவன், அவள் என்று அதற்கு
பேதமில்லை

சின்ன பென்சில் கூட
கொலைக்கருவியாகிறது

குறைந்தபட்ச தண்டனையாய்
மரணதண்டனை அளித்து
கூர் உடைக்கிறேன்

கருவிகளில்லா நேரங்களில்
வெறும் கையே
போதுமானதாயிருக்கிறது

கையில் படியும் இரத்தக்கறை
இரசிக்கையில்
என்னையுமறியாமல்
முளைத்துவிடுகின்றன
இரு கோரைப்பற்கள்

தெருவில் கலவிசெய்யும் நாயை
கல்லெடுத்து எறிகிறேன்
அந்த நாயாய் என்னை
ஒருவன் சொல்லால் அடித்தது
கல்லாய் பறக்கிறது

வீட்டில் நுழைந்து காலணி விடுகையில்
குதித்தோடும் கரப்பானை
துரத்திச் சென்று மிதிக்கையில்
வாயொழுகும் இரத்தம் சுவைக்கிறது

ஆற்றாமை, கோபம், காழ்ப்பு
எந்த கோப்பையிலிருந்தாலும்
விஷம் ஒன்றுதானே..!

சாக்ரடீசாக விரும்பியே
பருகுகிறேன்
ஒவ்வொரு துளியையும்

Monday, November 30, 2009

விகடனில் புத்தகம்

இந்த வார (02/12/2009) விகடனில் புத்தகம் வலைப்பூவைப் பற்றிய அறிமுகம் 'வரவேற்பறை' பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடன்வரும் நண்பர்கள் அனைவருடனும் இம்மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் :)

மேலும் தகவல்கள் இங்கே

- Bee'morgan

Wednesday, November 25, 2009

பூவும் தலையும்- தொடர்பதிவு

கொஞ்ச நாட்களாகவே இணையம் பக்கம் வரமுடியாதபடி ஆணிகள் பெருகியிருந்த நிலையில், சேரலிடமிருந்து கிடைத்தது இந்த தொடர்பதிவு அழைப்பு.. அண்ணன் சொல்லிட்டாருல்ல.. தட்ட முடியுமா? இதோ என் பங்குக்கு நானும் தொடர்கிறேன்..

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

ம்ம். இது போதும். இனி எனக்குப் பிடித்த சில தலைகள்..

1)தொலைக்காட்சியில்
பிடித்தவர்கள்:
கோபிநாத், அனு ஹாசன், சின்மயி (எல்லாரும் விஜய் டிவியான்னு கேக்காதீங்க.. இது தற்செயலானதே )

பிடிக்காதவர்கள்:
சுஹாசினி
விதிவிலக்கில்லாமல் சன்மியூசிக்கின் அனைத்து தொகுப்பாளர்களும்
மானாட மயிலாட வரும் நடுவர்கள் அனைவரும்

2) விளம்பரங்களில்
பிடித்தவர்கள்: சிலருண்டு. ஆனால் பெயர் தெரியாது. அடுத்த முறை டிவியில் வரும் போது காட்டறேன் ;)

பிடிக்காதவர்கள்:

அப்பாஸ் - பத்து நாயகிகளுடன் உப்புக்குச் சப்பாணி கேரக்ட்டராக இருந்தாலும் அவரோட மனதைரியத்துக்காக

சூர்யா : சுடர்மணி ஜட்டிகளைத் தவிர பாக்கி எல்லாத்திலயும் நடிச்சுட்டார்னு நினைக்கிறேன். இவர் கொஞ்சம் விளம்பரங்களைக் குறைச்சுகிட்டா நல்லாயிருக்கும்

அப்புறம் நமீதாவுக்கும் TMT கம்பிக்கும் என்ன சம்பந்தம்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

3) படத்தயாரிப்பில்
பிடித்தவர்கள்:
பிரகாஷ்ராஜ், ஷங்கர் அவசரத்தில் நினைவுக்கு வராத இன்னும் சிலர்

பிடிக்காதவர்கள்:
கலாநிதிமாறன், உதயநிதி (இவங்கள்லாம் நெனச்சா குருவி மாதிரி ஒரு படம் எடுக்கறதுக்கு தரமா இன்னும் நாலு படம் எடுக்கலாம். எவ்வளளோ பண்றாங்க. இதப் பண்ண மாட்டாங்களா? )

4) வசனத்தில்
பிடித்தவர்கள்:
எப்போதும் சுஜாதா :) அப்புறம் பாக்யராஜ், விஜி, சிற்சில முறைகள் பாலகுமாரன்

பிடிக்காதவர்கள்:
கலைஞர்

5) எழுத்தில்
பிடித்தவர்கள்:
சுஜாதா, கல்கி, எஸ்ரா, வண்ணதாசன், கி.ரா இது கொஞ்சம் பெரிய பட்டியல்.. அதனால இத்தோட போதும்

பிடிக்காதவர்கள்:
சாருவின் சில எழுத்துகள் அதன் காட்டத்தினாலேயே பிடிக்காமல் போனது. ஒரு சில இலக்கிய அரசியல்களில் மட்டும் ஜெமோ

6) பாடலில்
பிடித்தவர்கள்:
SPB, ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன்,கார்த்திக், சித்ரா, ஹரிணி, ஷ்ரேயா கோஷல்

பிடிக்காதவர்கள்:
சில பாடல்களில் மனோ, மற்றபடி பெரிதாக யாரும்இல்லை

7) ஓவியர்களில்
பிடித்தவர்கள்:
மாருதி, மதன், மணியம் செல்வன்

பிடிக்காதவர்: நான் சமீபத்தில் வாங்கிய பொன்னியின் செல்வன் பதிப்புக்கு ஓவியம் வரைந்தவர். வரைந்தவர் பெயர் போடவில்லை. குந்தவையைப் பார்த்து டென்சனாயிட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ். வந்தியத்தேவன் ஒரு படி மேலே போய் காமெடி பீஸ் மாதிரி இருந்தார். இந்த மாதிரி படம் போடறதுக்கு படம் இல்லாமலேயே பொசெ அருமையா இருக்கும்.

அப்பாடா.. ஒரு வழியா முடிச்சிட்டேனா.. அடுத்து இன்னும் மூணு பேர கோத்துவிடனுமாம்.. இதோ

ரெஜோ
சாணக்கியன்
Smiley

வாங்க மக்கா. .வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடுங்க.. :)

Wednesday, September 16, 2009

அலைக்குறிப்புகள்-3

அலைக்குறிப்புகள்-1
அலைக்குறிப்புகள்-2

நாங்கள் வந்தடைந்த டச் பேலஸ், உண்மையில் கொஞ்சம் பெரிய சைஸ் பங்களா மாதிரிதான் இருந்தது. இரண்டடுக்குகள், விஸ்தாரமான அறைகள், நீண்டிருக்கும் திண்ணையென நீண்டு படுத்திருந்தது அந்த மாளிகை.

16ம் நூற்றாண்டில் இதனைக்கட்டியர்வகள் போர்ச்சுக்கீசியர்களே. அதற்கடுத்த நூற்றாண்டில், தொடர்ந்து வந்த காலனியாதிக்கப் போரில், டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்ற இந்த அரண்மனையும் அவர்கள் வசமானது. அவர்களும் அவர்கள் பங்குக்கு அங்கங்கே சில மாறுதல்கள், அலங்காரங்கள் செய்து, போரினால் கோபமுற்றிருந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு இந்த மாளிகையை பரிசாக அளித்துவிட்டனர்.

அன்றிலிருந்து இது ஒரு ராஜ மாளிகை.

ராஜாக்களெல்லாம் ராஜ்ஜியமிழந்து போக, இப்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது.

ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேல் இந்த காட்சியகத்தினுள் அலைந்தோம். ராஜாக்கள் பயன்படுத்திய கர்சீப்பிலிருந்து பல்லக்கு வரைக்கும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். குடும்ப ஓவியங்கள், கேரளாவின் அரச பரம்பரையை விளக்கும் ஓவியங்கள் என்று விதவிதமாய் காட்சிக்கு கிடைக்கின்றது அரச வாழ்க்கை.

மேற்கத்திய கட்டிடக்கலைக்கும் இந்திய கட்டிக்கலைக்குமான கலப்பை இங்கு தெளிவாக உணரமுடியும். கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பும் நுழைவாயிலும் பாரம்பரிய கேரள வடிவில் அமைந்திருந்தாலும், உள்நுழையும் போது உயர்ந்த நிலைப்படிகளும் கதவுகளும் மேல் நோக்கிய ஆர்க் வடிவில் மேற்கத்திய பாணியை நினைவுபடுத்துகின்றன.

மேலும் படிக்க...

Sunday, September 06, 2009

அலைக்குறிப்புகள்-2

அலைக்குறிப்புகள்-1

எங்கள் சொந்த கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாங்கள் வந்திறங்கிய போர்ட் கொச்சியின் போட் ஜெட்டிக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக மற்றொரு ஞாயிற்றுக் கிழமையை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த நகரம்.

ஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் படும் முதல் விஷயம், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தொடர்பான சுவரொட்டிகள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்.

பெரிதாக திட்டம் எதுவும் இல்லை எங்களிடம். போட் ஜெட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன், இடது புறம் 'டச் பேலஸ்' என்று போர்ட் போட்டு 1.5 கிலோமீட்டர்கள் என்று போட்டிருந்தது. அதுவே எங்களின் முதல் திட்டமானது. வெயிலின் உக்கிரம் தொடங்காத காலை வேளை என்பதால் நடந்தே செல்லலாம் என்று தொடங்கினோம். மிக அமைதியான கடைவீதி.. மிக மிக அமைதியான தெருக்கள் என்று வழி நெடுகிலும் கிராமத்துக்கான உணர்வைத் தந்து செல்கிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் வாழ்ந்த சுவடுகளும் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாய் அறிவித்த பெயர்ப்பலகை ஒன்று ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு காலத்தின் சுவடுகளைச்சுமந்த மிச்சம் இன்னமும் எஞ்சிய படி கண்ணில் பட்டது. கடையின் கதவுகள் திறந்திருக்காத நிலையில் இன்னமும் அந்த கடை அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதா என்று ஆச்சரியப்படுத்தியது.

மேலும் படிக்க...

Monday, July 27, 2009

இன்னுமொரு பாதை


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

இன்றிலிருந்து இனிதே துவங்குகிறேன், இன்னுமொரு பாதையில் என் பயணத்தை.

நான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் ஒரு அறிமுகத்தை இந்த பக்கத்தில் இனி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நினைக்கும் போதே ஒரு பயம் கலந்த சந்தோஷம் உண்டாகிறது. என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. திடுதிப்பென்று களத்தில் இறக்கிவிடப்பட்ட சிறுவனின் படபடப்புடன், தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சேர்ந்து, நான் கொள்ள வேண்டிய கவனத்தை இன்னும் அதிகரிக்கன்றன.

ஊக்கமும் உற்சாகமும் அளித்து, வழித்துணையென இப்பயணத்தில் என்னை இட்டுச்செல்லும் சேரலுக்கும் ஞானசேகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவர்கள் இருவருமாக இணைந்து 'புத்தகம்' வலைப்பூவிற்கென்று ஒரு அளவீட்டை முன்னமே ஏற்படுத்திவிட்டனர். இனியெழுதப்போகும் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால், அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அளவீடுகளைத் தொடர்வதே. என்னால் முடிந்த வரை இப்பணியை சிறப்பாகச் செய்ய விழைகிறேன்.

என்னுடைய முதல் பதிவு 'மெளனியின் கதைகள்' இங்கே.

இந்த பக்கத்திலும் உங்களின் நேர்மையான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்..

நட்புடன்,
பாலா

Thursday, July 23, 2009

கன சதுரம்

எங்கிருந்து தொடங்க.. என்னவோ யோசித்து எங்கெங்கோ தேடி, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு முன் தொடங்கியும் விட்டேன் இந்த வலைப்பூவை.
முழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.

இந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

அப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள் அ.மு.செய்யது interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



மேலும் படிக்க...

Wednesday, July 22, 2009

அலைக்குறிப்புகள் - I

ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் எர்ணாகுளம் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் அமைந்தது. கடந்த முறை எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் அதிகமாக நேரம் செலவழி்க்க முடியாமல் போனதால் இம்முறை நிச்சயம் கொச்சின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

உள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..

மேலும் படிக்க...