Tuesday, June 30, 2009
ஊஞ்சல்
"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."
அதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.
நாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.
கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.
இது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.
மேலும் படிக்க...
Friday, June 12, 2009
சொல்லாத சொல்
உன்னைப்போலவே முறைக்கிறது
கைபேசிக்கு தலைசாய்த்து சாலையில்
எதிர்படுபவனின் சிகை
உன்னைப்போலிருக்கிறது
வாடியபூக்கள் சில வலுக்கட்டாயமாய்
உன் முகத்தை மனதில் இருத்திப் போகின்றன
கடன் அட்டைக்காக அழைப்பவன் கூட
உன் குரலை ஒத்திருக்கிறான்..
சாலையில், வீட்டில், திரையரங்கில்,
ஆற்றங்கரையில், பேருந்தில் என
நாம் ஒன்றாய் இருந்த அத்தனை
இடங்களிலும்
உன்னிடம் யாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு பதில் கிளம்புகையிலாவது
சொல்லியிருக்கலாம்
”என்னை மன்னித்து விடடா” என்று..
Wednesday, June 10, 2009
வாசகன்
முன்தினத்திலும் தவறாமல்
எடுத்துவைக்கப்படும் புத்தகங்கள்
பிரிக்கப்படாமலேயே ஊர்வந்தடைகின்றன..
அதைவிட சுவாரஸ்யமான
மனிதர்கள் வாசிக்கக்கிடைப்பதால்..
Wednesday, May 13, 2009
திருடர்கள் ஜாக்கிரதை
"யாரது?"
"திருடன்"
"என்ன வேணும்?"
"நகை வேணும்"
"என்ன நகை?"
"கலர் நகை"
"என்ன கலர்?"
"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"
ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..
உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?
மேலும் படிக்க...

திருடர்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டதென்று தெளிவாகத் தெரியவில்லை.. ஆனால், அன்றைக்கு விளையாடும் போதுதான், அந்த முடிவு எனக்குத் தோன்றியது.. அது, எப்படியாவது ஒரு உண்மையான திருடனைப் பார்த்து விடுவதென்று.
ஆனால், திருடர்களைத் தேடி எங்கு போவது எப்படிப் பார்ப்பது எதுவுமே இல்லாமல் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியாகிவிட்டது. முதல் வேளையாக அ பிரிவு ஜெகன் தான் நினைவுக்கு வந்தான். அவனுக்கு இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் பரிச்சயம் அதிகம். என்ன கொஞ்சம் அதிகமாக ரீல் சுத்துவான். அவனே வானை அளந்த மாதிரியெல்லாம் கதை சொல்வான். மற்றபடிக்கு சராசரிக்கும் சற்று குறைவான ஒரு மாணவன்தான்.என்ன மாதிரி கூச்சசுபாவமெல்லம் கிடையாது அவனுக்கு.
சொன்னதற்கு கெக்கெ பிக்கேவென்று கொஞ்ச நேரத்திற்கு சிரித்துகொண்டிருந்தவன், திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான்.
”ஆமாண்டா.. நானும் திருடன பாத்ததே இல்ல.. வா, ரெண்டு பேருமா பாக்கலாம்..”
ஆனால் அவனுக்கும் எப்படியென்று தெரியவில்லை.
எப்படியாவது அவன் ஒரு வழியுடன் வருவானென்று தெரியும்.. ஆனால் என்னவென்று மட்டும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்.
நினைத்தது மாதிரியே அடுத்தநாளே ஒரு திட்டத்துடன் வந்தான்..
மதியம் உணவு இடைவேளையில் அவனைப்பார்த்வுடனேயே,
”எப்படி டா?”
”கண்டு பிடிச்சுட்டோம்ல.. நம்மகிட்டேயேவா..”
என்றபடி ஒரு போலி பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்..
“எப்படின்னு சொல்லுடா” ஆர்வம் தாங்கவில்லை எனக்கு..
”சரி சரி. அவசரப்படாத.. எதுக்கு இவ்ளோ அலையனும்.. பக்கத்தூருலதான் எங்க மாமா டீக்கடை வச்சுருக்கார்”
” அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்”
”டேய்.. அங்கதான் G7 ம் இருக்கு” என்றபடி கல்மிஷமாய்ச்சிரித்தான்..
வழக்கம்போல் நான் பேந்த பேந்த விழிக்க, எனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொண்ட கர்வத்துடன் சொல்லத்தொடங்கினான்.. அதாகப்பட்டது, G7 என்பது எங்களின் பக்கத்தூர் போலீஸ் ஸ்டேஷன். அவன் சொன்ன அந்த மாமா கடை, G7 ன் பக்கத்து காம்பௌண்ட்.. அவர்தான் G7 ற்கு ரெகுலர் டீ சப்ளையர்.. எப்படியாவது, ஒரு நாள் டீ கிளாசுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியமட்டும் லாக்அப்புக்குள் விதவிதமான திருடர்களை கண்குளிர கண்டுவிடலாம் என்பது அவன் திட்டம்.
என்னைப்பொறுத்தவரை போலீஸ் ஸ்டேஷன் என்பதே ரொம்ப பெரிய சமாச்சாரம்.. அதில டீ கிளாசோட போய் மாட்டிகிட்டு என்னையும் ஜெயில்ல போட்டா என்ன ஆகறது.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு யார் போறது.வீட்ல எப்படி பதில் சொல்றது..
”ம்கூம்.. இதெல்லாம் ஆவுறதில்ல..”
”..?”
”பக்கத்தூருக்கு போகணும்னா பஸ் புடிக்கனும்.. பஸ்க்கு காசு வேணும்.. வீட்ல கேட்டா உதைவிழும்.. நம்மால முடியதுப்பா”
என்ற படி ஜகா வாங்கினேன்..
திருடனைப்பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை போல..
”வேணாம்டா விட்டுறலாம்டா..”
அவன் விடுவதாய் இல்லை.. அவனின் வழக்கமான ஜம்பம்..
”ம்ம்.. அஸ்க்கு புஸ்க்கு.. நான் ஒரு ஐடியா சொன்னேன்ல.. நீயும் ஒன்று சொல்லு.. சரிவரலன்னா விட்டுறலாம்”
என்று என்பக்கமே திருப்பிவிட்டான்.. சரி ஆனது ஆகிவிட்டது.. ஒப்புக்கு ஒரு ஐடியா சொல்லி இவனை கழட்டி விடறத்துக்கு, ஒரு நல்ல ஐடியாவை யோசித்தால் என் ஆசையும் நிறைவேறிய மாதிரி இருக்கும். ஆசை யாரை விட்டது.
அதற்கடுத்த ஒரு வாரமும் தினத்தந்தியில் கொலை கொள்ளை செய்திகளை ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கினேன்.. ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாய் இருந்தது.. ஒரு நாளில் இவ்வளவு கொள்ளைகள் நடக்கின்றனவா?
ஒரு வாரத்தில் திருடர்களைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்துவிடவில்லையென்றாலும், ஒன்று மட்டும் தெளிவானது.. ஒரு நாளில் ஏராளமான திருட்டுகள் நடக்கின்றன.. கண்டிப்பாக எங்கள் ஊரிலும் ஒரு திருடன் இருக்கவேண்டும் என்று. ஆனால், எப்படி அந்த திருடனை அடையாளம் காண்பது? எப்படிப்பாக்கறது..? வீட்டுக்குப் போயா? எதுவும் தெரியவில்லை.. இருந்தாலும், அடுத்த நாளே ஜெகனிடம் சொன்னேன்.. பக்கத்தூருக்கெல்லாம் போகாம உள்ளுரிலேயே திருடனைப்பார்க்கலாமென்று.. அவனுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்துப்போனது எனக்கே பெரிய ஆச்சரியம். அதிலிருந்த விடைதெரியா கேள்விகளையும் சொன்னேன்.. அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..
”அதுக்கெல்லாம் நம்மகிட்ட ஆள் இருக்கு.. எல்லாம் எம் செயல்” என்றபடி சீட்டியடித்தான்..
எரிச்சலாக வந்தது.. எப்படியோ, அவன் ஒரு பதிலுடன் வந்தால் சரி..
நான் நினைத்ததை விட சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டான் அவன்.
ஊர்க்கடைசியில் நெடுஞ்சாலைக்கு அருகே வீரனார் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு தாமரைக்குளம் உண்டு. அதில் இருப்பதெல்லம் அல்லியென்று ஊருக்கே தெரிந்தாலும் பெயர் மட்டும் தாமரைக்குளம்தான். அதற்குப்பின்னே ஒரு புறத்தில் அடர்த்தியாக மூங்கில் புதரும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பெரிய ஆலமரமும், தூங்கு மூஞ்சி மரமுமாக அடர்ந்து பந்தல்போட்டிருக்கும்.. அதற்கும் பின்னே போனால், உரக்கடை கோனாரின் வயல் தொடங்கிவிடும்..
அந்த வயலுக்கும் குளத்துக்கு பின்பான மரப்பந்தலுக்கும் இடையே ஒரு திட்டு தரிசு நிலம் உண்டு.. அங்கிருந்து பார்த்தால் நெடுஞ்சாலை தெளிவாகத் தெரியும். ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் ஆலமரம் வரைக்கும்தான் தெரியும். அந்த இடத்தில் இருந்தால், நமக்குத் தெரியாமல் யாரும் நெடுஞ்சாலை வழியே நம்மிடம் வரமுடியாது. இது போன்ற குணநலன்களால் அப்பகுதி மாதம் இருமுறை கள்ளு காய்ச்ச உகந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அவ்வகையில், இல்லாமல் அப்பகுதி சும்மா இருக்கும் நேரத்தில்தான் அங்கு திருடர்கள் வருவார்களென்றும் தங்களின் திருட்டுப்பொருட்களை பங்கு போட்டுக்கொள்வார்களென்றும், ஒரு நாள் ராத்திரி அங்கு போய் ஒளிந்திருந்தால் நிச்சயம் திருடனைப்பார்த்துவிடலாமென்றும் சொன்னான்.
கேட்பதற்கு தங்கமலரில் கதைபடிப்பது போலிருந்தாலும், எனக்கு உள்ளுர பயம் பரவியது. அந்த திருடர்கள் மாதிரி இவர்களும் கேள்வி கேட்டால் பதில்சொல்லிவிட்டு கொஞ்சம் நகையும் கொடுத்து அனுப்புவார்களா என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் இறங்கியாகிவிட்டது ஒரு நாள் ராத்திரிதானே. இதை மட்டும் தாண்டிட்டா, ஸ்கூலில் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், எங்களின் பிரதாபங்களை.. மற்ற பசங்களெல்லாம் வாயைப்பிளந்து கேட்பார்களென்பதே கொஞ்சமாய் போதையூட்டியது. இடம் தேர்வாகிவிட்டது. காலம், காலாண்டு விடுமுறையின் கடைசிநாளென நீண்ட கலந்தாய்வுக்குப்பின் முடிவுக்கு வந்தோம்.
அவ்வப்போது கனவுகளில் கழுத்தில் கர்சீப், பாரம்பரிமான கன்னத்து மச்சங்களுடன் திருடர்கள் வந்து பயமுறுத்திப்போயினர்.
காலாண்டுப்பரீட்சைக்குப் பிந்திய விடுறைகளை சிதைப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் இருப்பார்கள். அப்பரீட்சையில் வினாத்தாளாக வந்த அனைத்தையும் நோட்டுப்புத்தகத்தில் எழுதி விடுமுறை முடிந்து வருகையில் கொண்டு வரவேண்டும். அதை நான் எப்போதும் வெறுத்தாலும், அன்றிரவு நான் ஜெகன் வீட்டுக்குச்செல்ல அக்காரணம்தான் உதவியது.
ஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன். அன்றிரவு அவன் அப்பாவும் ஊரிலில்லை. நான் போனதிலிருந்தே ஒரேயடியாக அறிவுரை மழை பொழியத்தொடங்கிவிட்டானவன்.
போகும் போது முகத்தில் ஒரு துணி கட்டிக்கொள்ளவேண்டும். செருப்பு போடக்கூடாது. சத்தம் போடக்கூடாது. இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் பலவாய் பட்டியல் நீண்டது..
நள்ளிரவு நேரம் நெருங்க நெருங்க எனக்கு இதயத்துடிப்பு இரட்டிப்பாகி எகிற ஆரம்பித்தது.. குரல் கூட தெளிவாக வரவில்லை..
” ஜெகன்…”
”ம்ம்..”
“கண்டிப்பா போகணுமாடா.. நான் வேணா பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்குப் போயிடறேனே.. இன்னும் கொஸ்டின் பேப்பர் வேற எழுதல..”
”அடச்ச.. சும்மா கெட.. எத்தன தடவை சொல்றது.. இன்னைக்குப் போறோம்.. அவ்ளோதான்.. ”
”..”
”நீ வந்தா வா.. வராட்டி போ.. நான் இன்னைக்குப் போகத்தான் போறேன்..”
அப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டாலும், ஒரு வேளை ஜெகன் மட்டும் தனியே சென்று திருடனைப்பார்த்துவிட்டால் அதற்கப்புறம் அவனை கையிலேயே பிடிக்கமுடியாது. அதற்கும் மேலாக, இது என்னோட ஐடியா.. அதுக்காகவாகது நான் போகணும் என்ற முடிவே நிலைத்துவிட்டது..
11 மணிவாக்கில் மெல்ல வீட்டிலிருந்து கிளம்பினோம்.. அமாவாசைக்கு வெகு பக்கத்தில் நிலவு..இப்பவோ அப்பவோ என்பது மாதிரி கொஞ்சமாய் விளிம்பு காட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் சில இரவுப்பறவைகள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தில் அந்த துணி வேறு மூச்சைத்திணறடித்தது.. அடுத்த தெரு மூலையில் சில நாய்கள் மிரண்டு துரத்த, அந்த முகமூடித்துணியை நல்ல பிள்ளைகளாக மடித்து கையில் வைத்துக்கொண்டோம்.
அது வரை நான் கேள்விப்பட்டிருந்த கொள்ளிவாய்ப்பிசாசுகள், மோகினிகள், கோட்டை வீரன் கதைகளெல்லாம் அசந்தர்ப்பமாக நினைவில் வந்து கலங்கடித்தன. பேசாமல் அவன் சொன்ன முதல் ஐடியாவுக்கு ஓகே சொல்லியிருக்கலாம் என்று பட்டது. எது நடந்தாலும் பகலிலாவது நடந்திருக்கும்.
கண்ணுக்கெட்டும் தூரத்தில் கோயில் வந்தபிறகுதான், அப்பகுதி தெருவிளக்குகளாலும் கைவிடப்ட்ட பகுதியென்று உணர்ந்தோம். அவனுக்குள்ளும் லேசாக பயம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவன் முன்னே செல்ல, மெல்ல தாமரைக்குளத்தை நெருங்கிவிட்டோம்..
ஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் மாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும்.
ஒரு வழியாக இடது கரையே என்று தீர்ப்பாகியது. அவன் முன்னே செல்ல, அவன் கையைப்பிடித்த படி பின்னே நடந்தேன்.. அவன் கை நடுங்குவது அப்பட்டமாய்த் தெரிந்தது..
அந்த சேற்றுப்பகுதிக்கு வந்தபின் ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியாக வைத்தபடி முன்னேறுகையில்தான் அது நடந்தது.
யாரோ என் காலை கயிற்றைக்கொண்டு இறுக்குவது போல் இருந்தது.. வீல் என்ற ஒரு அலறலுடன் சேற்றில் விழுந்ததில், கழுத்துக்குக் கீழ் மொத்தமாக மூழ்கி சேற்றுக்குள் துளாவிக்கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக ஒரு திசையிலிருந்து ஜெகன் கத்துவது கேட்டது. என்னால் பதிலுக்கு கூட வாய்திறக்கமுடியாமல், தொண்டைக்குள் அடைப்பது போலிருந்தது. மறக்கமுடியாத அந்த பதினைந்து வினாடி களேபரத்தில், என் கால் கட்டு கொஞ்சமாய் நழுவி விழ, அடித்துபிடித்துக்கொண்டு கரையேறியபோது மொத்தமாக சேற்றில் முழுகி, சொட்டச் சொட்ட, நான் இந்நேரம் அழத்தொடங்கியிருந்தேன்..
அவனுக்குள் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காலியாகிவிட்டது..
”டேய்.. திரும்பிடலாம்டா”
விசும்பல்களுக்கிடையே தலையாட்டிடேன்.. அவன் பார்த்தானா தெரியவில்லை..
அதே வழியில் திரும்ப வர இருவருக்குமே தைரியமில்லை. பேசாமல், குளத்தைச்சுற்றிக்கொண்டு வலதுகரையுடன் வெளியேறிவிடலாமென்று முன்னேறினோம்..
அந்த ஆலமரத்தின் கீழ் வந்தபோதுதான் அதை கவனித்தேன்.. எங்களுக்கு நேரெதிரே இருபதடிக்கும் குறைவான தொலையில், இருட்டில், கொஞ்சம் பெரிய சைஸில் சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஒன்று காற்றில் அலைந்துகொண்டிருந்தது. எங்களை நோக்கி வருவது போல் தோன்றியது. அதே நேரம் அவனும் அதைப்பார்த்திருக்க வேண்டும்.
”ஓட்றா” என்றொரு குரல் மட்டும் தான் கேட்டது.. அவன் எந்தப்பக்கமாய் ஓடினானென்றெல்லாம் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஏதோ ஒரு வழி.. தொலைவில் தெரிந்த தெருவிளக்கை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தேன்.
அதற்கடுத்த நாள் நான் ஸ்கூலுக்குச் செல்ல வில்லை.
Tuesday, May 12, 2009
Sunday, February 22, 2009
அரசூர் வம்சம்
”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.
அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?
பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.
கேட்டு விட்டு எழுதுகிறேன்.”
படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.
மேலும் படிக்க...
ஒரே கோட்டில்தான் கதை செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைத் தொடராமல், மொத்தமாக அரசூரைத் தொடர்கிறது இக்கதை.
காலம் கிட்டத்தட்ட இரு நுற்றாண்டுகளுக்கு முன்.. அது ஏன் கிட்டத்தட்ட? அதுதான் பிரச்சனையே. காலம் என்ற ஒன்றே இங்கு கிட்டத்தட்டதான். சரி. கதைக்குப் போகலாம் வாங்க.
அரசூரில் ஒரு புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர் சுப்ரமணிய அய்யர். அவருக்கு இரண்டு புத்திரர்கள். வேதங்களை கரைத்துக்குடித்து கடைசியில் மனநிலை பிறழ்ந்து போகும் சாமா முதல்பையன். தந்தைக்குப்பின் புகையிலை வியாபாரத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் சங்கரன் இரண்டாமவன். வியாபாரம் மட்டுமல்ல. தினம்தினம் மாடியிலிருந்து பக்கத்து அரண்மனையில் ராணியின் ஜலக்கிரீடையையும் கவனித்துக்கொள்கிறான்.
ராணிக்கு ஒரு ராஜா. பெயரைத்தவிர ராஜாவுக்குரிய எந்தவொரு அடிப்படைத்தகுதியுமின்றி, வெள்ளையர்களை அண்டிப்பிழைக்கும் ஒரு டம்மி ராஜா. அவருக்கு மலப்பிரச்சனையிலிருந்து வாய் உபசாரம் கேட்கும் புஸ்தி மீசைக்கிழவன் வரை ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் தன் மனைவி குளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் பார்க்கிறான் என்பது பிரதானமிழந்துபோக, கஜானாவிலிருந்து கரையப்போகும் அடுத்த வராகன்தான் அவரின் கவலை.
மலையாளக்கரையிலிருந்து மாட்டுப்பெண்ணாக வரும் பகவதிக்குட்டி மற்றும் தமையன் கிட்டாவய்யன் குடும்பத்தைப்பற்றிய பின்புலம்.
பார்வதியைப் பெண் பார்க்க அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு மலையாளக்கரைக்குப் போனபோது சாமாவுடன் வீடும் தீக்கிரையாகுகிறது. அதிர்ச்சியில் அவன் தாய் கல்யாணியம்மாளுக்கு நோவுகண்டுவிடுகிறது. அப்புறம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சங்கரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிகிறது..
உண்மையில் கதையென்று பார்த்தால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை.

இது சாதாராண கதை. இதனை அசாதாராணமாக்குவதற்கென்றே வருகின்றனர் பனியன் சகோதரர்கள். காலத்தால் நுற்றைம்பது வருடத்துக்கு பின்னாலிலிருந்து சர்வசாதாரணமாக ஒரு ஆஸ்டின் காரில் காலத்தில் பயணிக்கின்றனர். கள்ளத்தோணி போட்டு ஜாமான் கடத்தற மாதிரி பின்னாளிலிருந்து பொருட்களை கொண்டு சென்று முன்னாளில் விற்று வருகின்றனர்.
ஒரு முறை இறந்தகாலத்தில் புகைப்படம் எடுத்து நிகழ்காலத்துக்கு வந்து டெவலப்செய்து, மீண்டும் இறந்த காலத்துக்கே சென்று விற்கின்றனர். எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயப்படாதீங்க. இதெல்லாம் புத்தகத்தில் வர்ரதுதான்.
போதாக்குறைக்கு ராஜாவையே சுற்றி சுற்றி வந்து திவசத்துக்கு சாராயம் கேட்கும் இறந்து போன ராஜாக்கள் வேறு.. சுப்பம்மாளின் வாயில் ஏறி நலங்கு பாடும் மூத்தகுடிப்பெண்டுகள் ஒரு புறம். சாமாவுடன் போகம் கொள்ளும் குருக்கள்பெண் மறுபுறம்.. என்று தெளித்து வைத்த மாதிரி வழி நெடுகிலும் மீகற்பனைக்கான வித்துகள் கொட்டிக்கிடக்கின்றன. யாவரும் அதனை சட்டைசெய்வதில்லை. அதுவும் ஒரு அங்கமாக, அது பாட்டுக்கு இருக்கிறது.
நாம்தான் உள்ளே நுழைகயில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..
ஏனெனில், எதிர்பாரா சாலையின் திருப்பங்களில், உங்களை மதமாற்றம் செய்விக்க குரிசைகளுடன் பாதிரிகள் காத்திருக்க கூடும். பிரசாதம் வாங்க கோயிலுக்குப் போனால், வெடிக்காரனின் கால்கள் வந்து பிரசாதத்தில் பங்கு கேட்கலாம். அக்கடா என்று சாலையில் நடக்கும் போது ஆகாயத்திலிருந்து சினேகாம்பாளின் தகப்பனார் உங்கள் மீது மூத்திரம் பெய்யலாம். அல்லது யந்திரத்தில் ஒளிந்திருக்கும் தேவதைகள் வந்து குடிக்க பால் கேட்கலாம். 300 ஆண்டுகளுக்கு முன் துர்மரணமடைந்த குருக்கள் பெண் வந்து போகத்திற்கு அழைக்கலாம்...
இதுதான் என்றில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் அரசூர்.
குறிப்பிடவேண்டிய விஷயம். அந்த மொழி நடை. விதவிதமான மொழிநடைகள். சுதந்திரத்துக்கும் முந்திய காலத்தின் வெகுஜன தமிழ்நடை மாதிரி.. அரதப்பழசான, தொட்டால் உடைந்துவிடக்கூடிய மாதிரி பழுப்புக்காகிதத்தில் தூசியேறிப்போய் சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்குமே.. அந்த மாதிரி ஒரு நடை.. எப்படித்தான் அப்படி எழுதினார் என்று ஆச்சரியமூட்டுகிறது. ஒரு பக்கம் ரெண்டு பக்கம் அல்ல, பெரும்பாலான இடத்தில் அத்தகைய நடைதான். முழுக்க பிராமண பாஷைதான்.. ஆனால், மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்களை அதிரவைக்கும் பிராமண பாஷை இது.
பெண்பார்க்கச் செல்கையில் அந்த மலையாள நடை. சென்னைக்குச் செல்கையில் காலத்தால் கொஞ்சம் மாறுபட்ட நடை என்று ஏகத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார் முருகன்.
அதே மாதிரி விதவிதமான கதாபாத்திரங்கள். வெண்பா வடிக்கும் கொட்டக்குடி தாசி, டெலிபதியை முயற்சிக்கும் பிஷாரடி வைத்தியர், தகட்டில் தேவதைகளை நிறுத்தும் ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார் திவரசப் பிராமணர் சுந்தர கனபாடிகள் என்று நிறைய நிறைய முற்றிலும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையம் ஸ்தாபிப்பதிலும், அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த பாத்திரங்களில் மனஓட்டங்களைச் சித்தரிப்பதிலும் ஆச்சரியமூட்டுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகப்படியான மன ஓட்டங்கள் சலிப்பைத்தருகின்றன.
அப்புறம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான மதராஸ்பட்டிண சூழலைப் படம்பிடித்திருப்பதும் ஒரு புதுமையான அனுபவம். காப்பி என்று புதிதாக வந்திருக்கும் ஒரு வஸ்துவைப்பற்றி சிலாகிக்கின்றனர். பெண்பார்ப்பதற்கு வண்டிகட்டிக்கொண்டு நாள்கணக்கில் பயணம் செல்கின்றனர். கிண்டி கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் போய் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பிராமணர்கள் இருக்கின்றனர். இப்படி இன்னும் பல.
உறுத்திய விஷயம். அதுவும் நடைதான்.. சில இடங்களில் ரொம்ப abusive.. கொஞ்சம் அதிகப்படியான டோஸ்தான்.. இவ்வளவு காட்டம் தேவையான்னு தெரியல. போகம் போகம் போகம். சில பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே போகமும் கூடவே வந்துவிட்டிருக்கிறது. ராஜாவுக்கு சேடிப்பெண் மீது எப்போதும் ஒரு கண். சாமாவுக்கு குருக்கள் பெண். சங்கரனுக்கு பார்வதிக்குட்டி. இருந்தாலும் கப்பலில் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் சுகித்திருக்கிறான். கிட்டாவய்யனுக்கு பணிமுடிந்து திரும்புகையில் வழியில் தென்படும் அனைத்து பெண்களும் காமபாணம் எய்கின்றனர். சில இடங்களில் கதைக்குத் தேவையான ஒன்றாகத் தோன்றினாலும் இவ்வளவு தேவையா? தெரியவில்லை.
இப்படியெல்லாம் கதை எழுதினால் இதன்பெயர் மாய யதார்த்தமாம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கார் நம்ம கவிதை அண்ணாத்த அனுஜன்யா. அவரின் இந்தப் பக்கத்திற்கு போய்ப்பாருங்க.
கடைசியா என்னதான் சொல்ல வர்ர? இதைப் படிங்கறீயா? வேணங்கறியா..?
நீங்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவரா (அ)
அவ்வப்போது மனநிறைவுக்குக்காகவும் பொழுது போக்கிற்காகவும் புத்தகங்கள் படிப்பவரா.. தாராளமாய் இந்த பதிவை இத்துடன் மறந்துவிட்டு உங்கள் அன்றாடப்பணிகளைத் தொடரலாம்..
இல்லை. நன் ஒரு தீவிர வாசிப்பாளன். தேடித் தேடிப் படிப்பவன். புதியன தேடும் பித்தன் அப்பிடீன்னெல்லாம் வசனம் பேசற ஆளா? தப்பே இல்லை.. படிச்சுப்பாருங்க.
புத்தகத்தை இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்
--------
அரசூர் வம்சம்
இரா. முருகன்
464 பக்கங்கள்
ரூ.175
கிழக்கு பதிப்பகம்
---------
Saturday, February 07, 2009
உபபாண்டவம்
இதுவரை நாம் கேட்டுவந்த பாரதங்கள் போல் படர்க்கையிலல்லாது முன்னிலையில் கதை சொல்லும் உத்தியே மிகவும் அலாதியானது.
மகாபாரதம் என்பது நடந்து முடிந்த கதையல்ல. அது நடக்கும் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை என்கிறார். ஒரு தேசாந்திரியாக அஸ்தினாபுரத்தினுள் நுழைந்து தன் கண்முன் நடக்கும் காட்சிகளாக பாரத்தை விவரிக்கிறார். முன்கதை தேவைப்படும் சில இடங்களில் சூதர்கள் சொல்லும் கதைகளாக நம்முன் வைக்கிறார்.
வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம். கொஞ்சம் கூட அவசரப்படாமல் நிதானமாக மிக நிதானமாக ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கும் மேலாக இந்நுலை படித்துமுடித்தேன். முடிக்கையில், கௌரவர்களும் பாண்டவர்களும் கதாமாந்தர்களாக இல்லாமல், நம் அண்டைவீட்டு மனிதர்களாக உருக்கொள்ளும் அந்த பிம்பமே ஆசியரியரின் வெற்றி.
நாம் இதுவரை பெயர் மட்டுமே அறிந்திருந்த பலருக்கு உணர்வும் உருவமும் தந்து உலவவிட்டிருக்கிறார். குறிப்பாக மயனின் முன்கதையும் ஜராவின் வஞ்சமும் ஏகலைவன் பெற்ற நாயின் சாபமும் போன்ற எண்ணற்ற கிளைக்கதைகள் பெருத்த அதிர்வினை ஏற்படுத்துகின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரண்மனையில் பாஞ்சாலியின் சிரிப்பொலியும் அதனால் துரியோதனன் கொண்ட சினமும் இயல்பாக நடந்தவையென்றே நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் தி்ட்டமிட்டே நடத்திவைக்கப்பட்டன என்று இவர் சொல்கையிலும் கூட கொஞ்சமும் முரண்படவிடாமல் மகுடிக்குக் கட்டுப்பட்ட சர்ப்பமென தன்னுடனேயே அழைத்துச்செல்கிறார்.
குறிப்பாக துரியோதன வதம் பற்றிய விவரிப்பில் துரியோதனனைப்பற்றி இதுவரை நாம் கட்டமைத்திருந்த அனைத்து பிம்பங்களும் உடைந்து சிதறுகின்றன. நாயகனுக்கும் அநாயகனுக்கும் இடையிலான யுத்தமாக விவரிக்காமல் இரு முரண்பட்ட கருத்துகள் கொண்டோருக்கு இடையிலான யுத்தமாகவே குருஷேத்திரம் இங்கு படர்கிறது.
படிக்கப்படிக்க ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்த மனிதர் வார்த்தைகளில் என்னவொரு லாவகத்துடன் விளையாடுகிறார். சுனையிலிருந்து பீறிடும் நீர் போல அத்தனை சரளத்துடன் ஒரு நடை. படிக்கும் போது ஒரு போதையென நம்மை ஆட்கொள்கிறது.
எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அனுபவம் அது. தீவிரவாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதது இந்த பாண்டவம்.
லயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால் மகாபாரதக்கதையில் ஓரளவுக்கு குழப்பமற்ற பரிச்சயம் நலம்.
உபபாண்டவம் பற்றி சேரலும் அருமையானதொரு பதிவிட்டிருக்கிறார் இங்கே.
இணையத்தில் வாங்க இங்கே செல்லலாம்.
----------------------
உபபாண்டவம்
எஸ். ராமகிருஷ்ணன்
விஜயா பதிப்பகம்
384 பக்கங்கள்
ரூ. 150
----------------------
Saturday, January 03, 2009
சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்

நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது? நினைவிலிருக்கிறதா?
எனக்கு வரையவே வராது. நான் வரைந்ததே இல்லை என்று தத்து பித்து காரணங்களெல்லாம் வேண்டாம்.
நாம் எல்லாருமே வரைந்திருக்கிறோம்.. சிறிதோ பெரிதோ.. சுமாரோ சூப்பரோ, சிலேட்டோ தரையோ புதுச்சுவரோ, அதனை ஒரு தேர்ந்த ஓவியனுக்கே உரிய சிரத்தையுடன் மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமக்காக.. நமக்காக மட்டுமே வரைந்திருக்கிறோம்.. நினைவிலிருக்கிறதா?
ஆனா ஆவன்னாவிற்கும் முன்னதாக நம் கைவரப்பெற்ற கலை அது. நாம் கற்றுக்கொண்ட முதல் வரிவடிவம்..
வரைந்து முடித்த பின்பான அந்த மனநிலை நினைவிலிருக்கிறதா..? வரைந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா? தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா? பள்ளியில் ஓவிய நோட்டில், ஓரு மலை அதன் இடையிலிருந்து ஓடிவரும் ஒரு நதி, கரையில் ஒற்றைத் தென்னைமரம், அருகிரேயே வயல் சூழ்ந்த ஒரு குடிசை வரைந்த அனுபவம் உண்டா?
எங்கே இருக்கிறான் அந்த ஓவியன் இப்போது? என்றாவது தேடியதுண்டா?
நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.
கொஞ்சம் யோசித்தால், பள்ளியில்தான் நான் முதன் முதலில் மற்றவர்களுக்காக வரையத்தொடங்கினேன்.. ஆசிரியர்களுக்காக. நான் வரையவனவற்றின் மதிப்பு அவை பெறும் மதிப்பெண்களை விட அதிகம் எனக்கு.. ஒவ்வொருவருக்கும்தான்.
இப்படித்தான் வரைய வேண்டும் என்றில்லாமல், எப்படியும் வரையலாம் என்றிருந்த காலமது.
8 ம் வகுப்பு ஆ பிரிவில் கயல்விழியின் ரப்பர் வளையளோ, ஜியாமெண்ட்ரி பாக்சின் நீள் வட்டத்துளையோ, ஏதுமற்ற நேரங்களில் வெறும் கையோ போதுமானதாக இருந்தது கிளாமிடோமோனாசை வரைவதற்கு. அப்போதெல்லாம் கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி. வரைந்து முடித்த பின்,
”ஹை.. என்னோடதப் பாரு.. எப்படி இருக்குனு.. நல்லாருக்கா..?”
ஒவ்வொரு வகுப்பிலும்.. இந்த சம்பாஷனைகள் கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும்..
வகுப்பறைக்கு வெளியே ட்வீட்டியும் மிக்கி மௌசும் என் பால்ய நண்பர்கள். ஏராளமான முறை வரைந்திருக்கிறேன். தங்கமலரில் வரும் கிருஸ்துமஸ் தாத்தா, ஒரு வரி பிள்ளையார், காந்தி தாத்தா என அனைவரும் என் கைவண்ணத்திலிருந்து தப்பியதில்லை.
பள்ளியில் மிக எளிய கோட்டோவியங்களிலிருந்து கொஞ்சம் சிக்கலான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரையத்தொடங்கிய நாளில், என் நண்பர்கள் பலருக்கு வரைவதின் மீதிருந்த ஆர்வம் ஓரமாய் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதன் உச்சம் விலங்குசெல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அந்த சமயம் பெரும்பலானோர், பேப்பரில் பென்சில் கொண்டு கொத்து பரோட்டோ போடத் தொடங்கியிருக்க நான் மட்டும் கோலத்துக்கு புள்ளி வைப்பதாய் வைத்துக்கொண்டிருப்பேன். எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டு விட்டது அந்த ஆர்வம். நான் பெரிய ஓவியன் என்ற அவசரமுடிவுக்கெல்லாம் வரவேண்டாம். நான் வரைபவன். அது எப்படி வந்தாலும் விடாது வரைபவனாகத்தான் இருந்தேன். அது ஏதோ ஒரு வகையில் மனநிறைவைத் தந்தது.

கல்லூரிக்கு வந்த புதிதில், Engineering Drawing ஆஸ்பத்திரி சுத்தத்துடன் வரைதலை அணுகச் சொன்னது. ஒவ்வாரு மில்லி மீட்டரும் வரைதலின் அங்கம் என்றது. வரைந்தேன். அதுவும் கூட புதுவகையான ஆனந்தமாக இருந்தது. வரைவதற்கென்றே பிரத்யேகமான தயாரான தாள் , விதவிமான கருவிகள், உயரமான மேசை என புதுச்சீருடையில் பள்ளி செல்லும் குழந்தையின் குறுகுறுப்புடன் கடந்து சென்றன அந்த ஓவிய நாட்கள்.
முதலாமாண்டு கடந்த பின்னரும் கூட அவ்வப்போது, தூங்க வைக்கும் பேருரையாசிரியர்களின் வகுப்புகளில் நோட்டுப்புத்தகத்தில் ஏதேதோ வரைந்ததுண்டு.
ஆனால் இன்று வேலைக்கு வந்த பின் கடைசியாய் வரைந்தது எப்போது என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வரைதல் என் விருப்ப பொழுதுபோக்காக இருந்ததிலிருந்து, ஒரு தொழிற்பெயராய் மாறியது எப்போது என்று யோசித்தால் விடையில்லை.
ஒரு வேளை பால்யம் தொலைத்து சொந்தம் விட்டு, தேசம் விட்டு தூக்கம் தொலைத்து நாம் துரத்தும் நாணயச் சிதறல்களில் காணாமல் போயிருக்கலாம். எனக்கு வரைதல் போல உங்களிடமிருந்தும் கவனிக்கக் கூட அவகாசமின்றி ஏதாவதொன்று காணாமல் போயிருக்கக் கூடும். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தேடிப்பாருங்கள், தொலைத்த இடத்தை கடப்பதற்கு முன்..
பள்ளியில் என்னுடன் படித்த பழனிவேலுவுக்கு வினோதமானதொரு பழக்கமுண்டு. ஒவ்வொரு முறை சமூகஅறிவியல் பாடத்தில், பெருங்கடல்களைக் குறிக்கச்சொல்லி வரைபடங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், சமுத்திரங்களை குறித்து விட்டு, அவற்றில் கர்ம சிரத்தையாக மீன்களை வரைந்து கொண்டிருப்பான். பல முறை ஆசிரியர்கள் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவன் மாறவே இல்லை. கேட்டால்,
”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.
ம்ம்ம்...
இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.
Monday, December 08, 2008
ரகுவம்சம்
ஒவ்வொரு அரசனின் வரலாறும் ஒரு அத்தியாயமாக வருகிறது. இராமனின் வரலாறான இராமாயணம் இந்நூலின் ஒரு அத்தியாயம் எனும் போது ரகு வம்சத்தின் உண்மையான பரிமாணம் விளங்கும்.
யார் இந்த ரகு? ரகு, ராமனின் கொள்ளுத்தாத்தா. ராமனின் வரலாற்றில் ஏராளமான ஜனரஞ்சக விஷயங்களும் வீரதீர சாகசங்களும் நிறைந்திருந்தாலும், ரகுவின் காலத்தில்தான் அந்த சாம்ராஜ்யம் விசுவருபம் கொண்டு தெற்கே காவிரி வரை வியாபித்து நிலைகொண்டது. அதனால்தான் ரகுவம்சம்.
ஆசிரியருக்கு சொல்வதற்கு ஏராளமான விசயங்கள். எல்லாவற்றையும் முடிந்த அளவு சுவைகுன்றாமல் சுருக்கி அளித்திருக்கிறார்.
படிக்கும் போதே கருத்தைக் கவர்வது அந்த மொழி நடைதான். படிக்க படிக்கத்தான் புரிகிறது காளிதாசன் ஏன் இவ்வாறு கொண்டாடப்படுகிறான் என்று. ஒரு மாதிரி ஆடம்பரமான எழுத்து நடை. குறிப்பாக உயர்வு நவிழ்ச்சியும் தற்குறிப்பேற்றமும் திகட்டத் திகட்ட கொட்டிக்கிடக்கின்றன.
நூற்று முப்பதுக்கும் குறைவான பக்கங்களில் மிகச்சிறிய புத்தகம்தான். ஒரு சில மணிநேரங்களில் முடிக்க முடிந்தாலும், மிக நிதானமாக அனுபவித்துப் படிக்க வேண்டிய ரகம் இது.
காட்சி விவரிப்புகளிலும் அப்படி ஒரு அழகு. நான் எதுவும் சொல்ல வேண்டாம். இதோ ஒரு வசந்த கால வர்ணனை..
மாமரத்தில் தளிர்கள் தோன்றி காற்றில் அசையும் போது கிளைகள் விரல்களை அசைத்து அபிநயம் செய்ய பழகுவது போல் தோன்றின. குயில்களின் வசந்தகாலக் கூவல், நாணத்தால் இளம்பெண்கள் காதற்பேச்சை மென்று விழுங்கிப் பேசுவது போல் இருந்தது. காடு முழுவதும் மலர்கள் தோன்றி, வண்டுகள் ரீங்காரம் செய்யத்தொடங்கின. இதனால் கிளைகள் அபிநயம் பிடித்து ஆடின
ரகுவம்சம் - பக்கம் 67
அழகியல் மட்டுமல்ல, போர்களங்களிலும் இந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது. அஜன் படையெடுத்து செல்லும் காட்சியை காளிதாசன் எப்படி விவரிக்கிறான் என்று பாருங்கள்.
ஆனாலும் முறைப்படி நடந்த யுத்தம் மிகக்கடுமையாக நடந்தது. பலர் அதில் கொல்லப்பட்டனர். பலருடைய தலைகள் வெட்டப்பட்டு, வெட்டிய வேகத்தால் அவை உயரக்கிளம்பிச் சென்றன. யுத்தகளத்தில் பிணங்கள் கிடந்ததால், கழுகுகள் ஆகாயத்தில் சுற்றிச் சுற்றி வந்தன. அவற்றின் கால்நகங்களில் தலைகளின் மயிர் சிக்கியதால் தலைகள் கீழே தரையில் விழத் தாமதம் ஆயிற்று.
... ... ...
குதிரைகளின் காலடி வேகமாகப் படுவதால் புழுதி கிளம்பியது. யானைகள் தன் விசிறி போன்ற காதுகளை அசைப்பதால் புழுதி எங்கும் பரவியது. பரவிச்சென்ற புழுதிப்படலம் சூரியனையே திரையிட்டு மறைப்பதைப் போல் மறைத்துவிட்டது. ஆனால், போரின் கடுமை மேலும் அதிகரித்தபின் வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பெருகும் ரத்தம் புழுதியைச் சற்றே அடக்கியது..
ரகுவம்சம் - பக்கம் - 53,54
‘நந்தவனத்திற்கு செல்லும் வழி’ என்று பெயர்ப்பலகை படிப்பதைப் போலிந்தது இந்நூல். நந்தவனம் என்று படிக்கும் போதே இப்படி இருக்கிறதே, உண்மையிலே அந்த நந்தவனத்திற்கு சென்றால் என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் கடந்து செல்கிறது. ரகுவம்சத்தை அதன் மூல வடிவிலேயே படித்துச் சுவைக்கும் அளவிற்கு மொழியறிவு இல்லாததால் பெயர்ப்பலகை கொண்டே சமாதானம் கொள்ளவேண்டியிருக்கிறது.
கதை நடந்த காலத்தை ஒட்டிய பல சுவையான துணுக்குகள் காணக்கிடைக்கின்றன. ஏதாவது மரம் பூக்காமல் இருந்தால் என்ன பண்ணுவோம். கொஞ்சம் யூரியாவோ பொட்டாஷோ கலந்து வைக்கணும் என்றுதான் நாம் யோசிப்போம். ஆனால், காளிதான் எப்படி யோசிக்கறார்னு பாருங்க.
மகிழ மரம் மலராது இருந்தால், இளமையான அழகிய பெண்கள் மதுவைத் தம் வாயில் ஊற்றி, பின் மரத்தின் மேல் உமிழவேண்டும். அப்படி உமிழ்ந்தால் மரம் உடனே பூக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு தோஹதம் என்று பெயர்.
ரகுவம்சம் - பக்கம் 66
(கொடுத்து வைத்த மகிழ மரம் ;-) )
இப்படிப் பண்ணினா, நிச்சயம் மரம் பூக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?
பல போர்க்களத் தந்திரங்களும் காணக்கிடைக்கின்றன.
முன்னேறிச் செல்லும் சேனைக்கு இடையூறாக எங்கேனும் சிறிய ஆறுகள் குறுக்கிட்டால், யானைகளை வரிசையாக நிறுத்தி பாலம் அமைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் செல்லும். இப்படித்தான் கபிசை என்ற ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் சென்றன.
எங்கும் யுத்ததர்மம் மீறப்பட்டதாக குறிப்புகள் இல்லை. (பெரும்பாலான) யுத்தங்கள் தர்ம சாத்திரத்தின் படியே நடந்திருக்கின்றன. படையெடுத்து செல்லும் மன்னன் போர் ஒன்றையே குறிக்கோளாய்க் கொள்ளாமல் செல்லும் வழியிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சாலையமைத்தல் நீர்வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்தபடியே முன்னேறுவதாக வருகிறது.
இங்கு கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு. ஒன்று போர் என்பது நாட்டின் எல்லைகளை விரிவாக்குவதற்கு நடந்தாலும், அதில் ஒரு அவசரம் இல்லை. முன்னேறும் படைகள் மிக நிதானத்துடன், தங்களின் மக்கள் வளத்தை வீணடிக்காமல் ஊர்ச்சீர்திருத்தத்துக்காக பயன்படுத்தியுள்ளனர்.
இரண்டாவது போர்களத்திற்கு செல்லும் படைகளை அக்ரோணி என்ற அலகில் வரையறுக்கின்றனர். இப்படி பெரும்படைகள் கடந்து செல்லும் போது கடக்கும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஏராளமான உணவுப்பொருட்களும் பிற அடிப்படைத் தேவைகளும் பெறப்படும். என்னதான் நாட்டைக் காக்கும் படையாக இருந்தாலும், ஒரு அளவைத் தாண்டும் போது மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். அதனை தணிக்கும் விதமாகவும் இந்த சீர்திருத்தங்களைக் கொள்ளலாம்.
எது எப்படியோ, யுத்த தர்மத்திலும் அரசியல் நடைமுறைகளிலும் ரகு வம்ச மன்னர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
முழுவதும் கதையுடன் ஒத்துப் போனேன் என்று சொல்ல முடியாது. ஒரு சில முரண்கள் ஏற்பட்டாலும், இது ஒரு காவியம். அந்த வகையில் சில சலுகைகள் கிடைத்துவிடுகின்றன.
நூலாசிரியர் அ.வெ.சுப்பிரமணியனை பாராட்டியே ஆகவேண்டும். காலம் கடந்து நிற்கும் ஒரு காவியத்தை அழகாக தமிழ் வாசகர்களுக்காக படைத்திருக்கிறார்.
NHM ன் புத்தக வடிவமைப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஒரே ஒரு நெருடல். ‘சமஸ்கிருமும் தமிழும் இவருக்கு இரண்டு கண்கள்’ என்பதைத் தவிர, மருந்துக்குக் கூட ஆசியரைப்பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இல்லை. சிறிய அளவிலாவது ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கலாம் என்று பட்டது.
மத பேதங்களைக் கடந்து தொன்மையான இந்திய மனதின் கதைகளை, அதன் வரலாறை, வாழ்க்கையை அறிந்து கொள்ள, இது முழுமையான நூல் அல்ல. ஆனால், நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல்.
நூலைப் பற்றிய மேலும் சில தகவல்கள்:
ரகுவம்சம்
அ.வெ.சுப்பிரமணியன்
வரம் வெளியீடு
136 பக்கங்கள்
ரூ.60
ISBN 978-81-8368-424-8
புத்தகத்தை இங்கே வாங்கலாம்.
சிறப்பான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து, இப்புத்தகத்தை வழங்கி உதவிய NHM - ற்கும் உடனுக்குடன் பதிலளித்து உதவிய நண்பர் ஹரன் ப்ரசன்னாவிற்கும் என் நன்றிகள்.
Monday, November 10, 2008
ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரின் கதை
மனதுக்குள் சொல்லவொனதாத ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வந்தது.. அலுவலகத்தின் ஒரு மூலையிலமைந்த சிறிய டிஸ்கஷன் ரூம் அது. போதுமான இருக்கைகள் இருந்த போதிலும் 6 பேரும் நின்று கொண்டிருந்தோம்.
அதோ முன்சரிந்த தொப்பையம் வழுக்கைத்தலையுமாக என்னைப்பார்த்து குரைத்துக் கொண்டிருக்கும் ராஜிவ் தான் என் மேனேஜர். எங்களின் சந்தோஷத்தை கெடுப்பதற்கென்றே டெல்லியிலிருந்து வந்திருக்கும் 100 கிலோ அவஸ்தை. இன்று நான் டெலிவரி கொடுக்வேண்டிய Module-ல் இன்னும் மூன்று P1 issues. இரவுக்குள் முடிக்கவேண்டுமாம். அதற்குத்தான் இத்தனை அலம்பல்.
அவருக்கு குறைந்தது 40 வயதிருக்குமா? இருக்கலாம். கொஞ்சம் குள்ளம்தான். நல்லா புளி மூட்டை மாதிரி ஒரு தொப்பை. வழுக்கைத்தலையில் இரண்டு காதுகளுக்கு மேல் மட்டும் புதர் மண்டிய மாதிரி முடிக்கற்றைகள். அதில் ஒரு புற முடியை மட்டும் நீளமாக வளர்த்து மறுபுறம் நோக்கி படிய சீவி, வழுக்கையை மறைக்க முயற்சித்திருப்பார்.
மீட்டிங் முடிந்து வெளியில் வந்தவுடன், சீட்டுக்குப் பாகவே வெட்கமாய் இருந்தது.. இப்போது சீட்டுக்குப்போனால் துக்கம் விசாரிக்கிற மாதிரி ஆனந்த் கேட்கும் கேள்விகளுக்கு இவரே தேவலாம் என்று தோன்றும்.
மாடிக்குப்போய் ஒரு காபி குடிக்கலாம்.
“நேத்து ராத்திரி நைட் அவுட் டா.. 3 மணிநேரம் Dorm போயிட்டு, திரும்பிவந்து வேலை பாத்துகிட்டுருக்கேன்.. அவன் என்னமோ பெரிய இவன் மாதிரி கத்தறாண்டா..என்கிட்ட தனியாவாவது சொல்லியிருக்கலாம்.. எல்லாரும் இருந்தாங்கடா. பூஜா வேற இருந்தாடா.."
(பூஜா என்பது, சுமாராக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சூப்பராக இருக்கும் நார்த்தி பிகர் எனக் கொள்க)
“என்னடா பண்றது.. எல்லா மேனேஜரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க.. எனக்கும் ஒருத்தன் வந்து வாச்சிருக்கான்.. எங்கிருந்துதான் வர்ரானுங்களோ.." காஃபி டேபிளில் எழில் இருந்தான்.
“FS மட்டும் ஒழுங்கா இருந்திருந்ததா இதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருக்குன்டா.. அங்க போய் பம்ம வேண்டியது.."
“…"
“நாம பண்ற வேலைக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு?"
மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு மூலையில் அழவேண்டும் போல் தோன்றியது. சே.. சே.. இது ஆத்திரம் என்று தேற்றிக்கொண்டேன்.
உடம்புக்குள் போன் காபின் கொஞ்சமாக என் மனநிலையை மாற்றியிருந்தது. ஆனாலும் என் மேனேஜர் கமண்டலமும் நீரும் இல்லாமல் தொடர்ச்சியாக என்னிடமிருந்து சாபங்களைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
எங்களின் US டீமுக்கு காலைக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். நம்மூர் கணக்கில் நள்ளிரவு 12.30க்குள்.
அரக்க பரக்க முடித்து ஒரு வழியாக ரிலீஸ் செய்த பின்தான் மூச்சே திரும்பவும் வந்தது. டைம் என்ட்ரி போட்டு இன்ன பிற சடங்குகளை எல்லாம் முடித்து Log Off செய்கையில்
“ஹே பாலா.." என்றொரு குரல்.
நிமிர்ந்தால் என் மேனேஜர்.
“கம் ஆன் மேன்.. என் கார்லையே ட்ராப் பண்ணிடறேன்.. வா.."
“இட்ஸ் ஓகே ராஜிவ்.. நோ பிராப்ளம்.. நான் கம்பெனி கேப்-லையே போயிக்கறேன்.."
“அட சும்மா வாப்பா.. நானும் அப்படித்தான் போறேன்.."
எனக்கும் சரியென்று பட்டது. நீங்கள் செய்தது தவறுன்னு அவருகிட்ட நேரடியாவே சொல்லிடனும்.. இதுதான் சான்ஸ்..
அலுவலகத்தின் கீழ் நான் காத்துக்கொண்டிருந்தேன். தன் வெர்னாவை எடுத்துக்கொண்டு வந்தார். கடந்த மாதம்மான் வாங்கிய கார். பளபளப்பாய் மின்னிது.. எல்லாம் எங்கள புழிஞ்சு எடுகுற காசுதான.. மின்னாம..?
சாலை வெறிச்சோடிக்கிடந்ததற்கு மிக மெதுவாகவே ஓட்டினார். ஏதோ ஒரு இந்திப்பாடலைப்போட்டவர் திடீரென ஞாபகம் வந்தவராய்,
“Oh. I am sorry" என்றபடி FM-ற்குத் தாவினார்..
பீவர் ஒன் ஓ போர் என அர்த்த ராத்திரியிலும் கத்திக்கொண்டிருந்தனர். சூரியனின் இனிய இரவு மாதிரி ஒரு நிகழ்ச்சி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஒரு நப்பாசை தோன்றி மறைந்தது.
திடீரென என் பக்கம் திரும்பி
“என் மேல உனக்கு கோவம்தான?" என்றார்..
நான் இந்த திடீர்த்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை..
சுதாரித்துக்கொண்டு,
“கோவம்னு இல்ல ராஜிவ்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. ம்ம்..என்னாதான் இருந்தாலும், கடைசியில ப்ராஜெக்ட்தான முக்கியம்.." மண்ணாங்கட்டி ப்ராஜெக்ட்
“தட்ஸ் குட் மேன்.. என்ன பண்ண.. சில நேரங்களில் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கு.. என் வேலை அப்படி.. "
FM-ஐ அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாய் எங்கள் பயணம் தொடர்ந்தது.
ரிங்ரோட்டை அடைந்தாகிவிட்டது.. இன்னும் 15 நிமிடங்களில் வீட்டுக்குப் போய்விடலாம். இப்போதே, படுக்கையில் சுகமாய் உறங்குவதைப்போல பிம்பம் கண்ணில் நிழலாடத்தொடங்கியது.
"Work is work.Life is life. ரெண்டையும் கொழப்பிக்காத.."
ஏன் என்னிடம் இதைச் சொல்கிறார். திரும்பவும் எரிச்சலாக வந்தது. இரண்டு நாட்களுக்கான தூக்கம் வேறு கண்களில் தேங்கிநின்று தலைவலியைத்தந்தது.
டேஷ்போர்ட் மீது சிலபல சாக்லேட்டுகள் சிதறிக்கிடந்தன. ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் நீட்டிவிட்டு அடுத்ததை மிக சாவகாசமாக இரண்டு கைகளாளும் பிரித்தவர், என் பதட்டத்தைப்பார்த்து விட்டு, கவலைவேண்டாம் என்பதைப்போல் சைகை செய்தார்.
“இது நான் போனதடவை அட்லாண்டா போயிருந்தப்போ வாங்கிட்டு வந்தது. “
எனக்கென்ன?
“I love this choco" உடன் அவரின் வாக்கியம் தடைப்பட்டது.
பாதிகடித்த அந்த சாக்லேட் தன் வாக்கில் கீழே விழுந்தது.. இவர் அவசரமாக கியர்மாற்றி, சாலையோரம் வண்டியை நிறுத்தினார்.
“என்னாச்சு ராஜிவ்?" என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே எனக்கு புரிந்து விட்டது.
அவரால் எதுவும் பேசமுடியும் என்று தோன்றவில்லை. தூக்கமுடியாத பளுவை தூக்குபவர் போலிருந்தது அவரது முகபாவம். ஒரு மாதிரி நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்துவிட்டார். திடீரென்று அவர் முகம் முழுவதும் முத்து முத்தாக வியர்த்திருந்தது. கண்கள் முக்கால்வாசி மூடியநிலையில் மேலே எங்கேயோ சொருகியிருந்தன.
ஒரு கணம் எல்லாமே மறந்து, துடைத்து வைத்த கரும்பலைகை மாதிரி ஒரு உணர்வு.
நெஞ்சில் காதைவைத்துப்பார்த்தேன் நாடி இருப்பது போலவும் இல்லாதது போலவும் பாவ்லா காட்டி பயமுறுத்தியது.
முதலுதவி பற்றியெல்லாம் விவரம் பத்தாது எனக்கு.. ஒரு சில திரைப்படங்களிலிருந்து வந்த அறிவு மட்டும் அவர் நெஞ்சை அழுத்தச் சொன்னது.. அதுவும் அவ்வளவு எளிதாக இல்லை. என்னால் ஒரு இன்ச் கூட அழுத்தமுடியவில்லை. குத்தலாமா? குத்தினால் வலிக்குமா? வலித்தால் எழுந்து கொண்டு சண்டைக்கு வருவார் போன்ற அபத்தமான கற்பனைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு ஓங்கி குத்தினேன்.. எந்தவித சலனமும் இல்லை..
முருகா.. இரண்டாம் முறை. லேசாய் ஒரே ஒரு இருமல்.. மூன்றாம் குத்திற்கு ஒரு சிறிய அதிர்வு கொடுத்து முன்புறம் ஸ்டியரிங்கில் சாய்ந்துவிட்டார்.
யாரிடமாவது உதவிகேட்கலாமென்றால், நாங்கள் இருப்பது மகாதேவ்புராவுக்கும் கேஆர் புரத்துக்கும் இடையில் ஒரு பொட்டைக்காடு. கண்ணுக்கெட்டியதுரம் வரையில் ஒரு வீடும் கிடையாது.
உடனடியாக ஆனந்த் நம்பருக்கு கால்செய்தேன். புல் ரிங் போய் கட்டாகியது. என் அவசரம் புரியாமல் துங்கிக்கொண்டிருக்கிறான்.
கடவுளே.. என் கூட வரும்போதுதான் இப்படி ஆகணுமா..? அவருடன் இப்போது வந்ததில், இப்போது என்ன நடந்தாலும், நான்தான் தார்மீக பொறுப்பா..? எல்லாம் என் நேரம்.. இதற்குள், இந்த நவம்பர் மாத 15 டிகிரி பெங்களுர் இரவிலும் அவரை விட அதிமாக எனக்கு வேர்த்திருந்தது.
என்றோ சேமித்த ஜஸ்ட் டயல் நம்பர் நினைவுக்கு வந்தது. அவசரமாக போன்செய்து, மணிபால் நம்பர் நம்பருக்கு பேசினேன்.
அந்த நேரத்திலும் புத்துணர்ச்சியான ஒரு பெண்குரல். கேட்கவே கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார்.. இன்னும் 10 நிமிசத்தில அங்க வந்திடறோம். நீங்க அதே ரோட்ல இன்னும் ஒரு கிலோமீட்டர் போனா, விஜய் ஹாஸ்பிடல்ஸ் வரும். உங்களால முடிஞ்சா நீங்களே சீக்கிரமா அங்க போயிடுங்க சார்.. ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப முக்கியம்" என்று வயிற்றில் புளியைக்கரைத்தபடி போனை வைத்தார்.
இதற்குள் 5 நிமிடங்கள் கடந்திருந்தன.
டேஷ் போர்டிலிருந்த ஒரு சாக்லேட் கீழே விழுகையில்தான் கவனித்தேன். இன்ஜின் இன்னும் உறுமிக்கொண்டிருந்தது.
நானா.. சான்சே இல்லை... வாழ்க்கையிலேயே இதுவரை ஒருமுறைதான் கார் ஓட்டியிருக்கிறேன்.. அதுவும் 4 வருசம் முன்னாடி லைசென்ஸ் எடுக்கறதுக்காக ஓட்டுனது. எது கிளட்ச் எது பிரேக்குன்னே மறந்து போச்சு.. என்னால முடியாதுபா.
அதனால என்ன.. ஒரே ஒரு கிலோமீட்டர்தான். எப்படியாவது சமாளிச்சு உருட்டிகிட்டாவது போயிடலாம்.. முயற்சி பண்ணலாம் தப்பில்லை. உயிர்ப்பிரச்சனை என ஏதோ ஒரு அபிமானம் பேசியது.
என்னவானாலும் சரியென்று அபிமானம் பக்கம் சாய்ந்தேன்.
முதல் வேலை ஸ்டியரிங்கில் சாய்ந்திருக்கும் அவரை அப்புறப்படுத்துவது. அவரை நிமிர்த்தி உட்கார வைப்பதற்கே ஒரு குதிரை திறன் தேவைப்படும் போல் தோன்றியது. அவரை அப்படியே பக்கத்து சீட்டுக்குத் தள்ளி விட்டதில் ஒரு மாதிரி கோணலாக படுத்துக்கொண்டார். இன்னும் கால் கிளச் மீது இருந்தது.
அதையும் அப்புறப்படுத்தி, முதல் சில நுறு மீட்டர்கள் தட்டுத்தடுமாறி ஓட்டியபின்தான் நம்பிக்கையே வந்தது. அடுத்த மூன்றாவது நிமிடம் ஆஸ்பத்திரியில்.
அவசரமாக ஓடிச்சென்று ரிசப்சனில் சொன்னது மட்டும்தான் என்வேலை.
“அவரு உங்களுக்கு என்ன வேணும்"
“My Uncle."
“இந்த Form-ல கையெழுத்து போடுங்க.."
நான் போடும் முன்பாகவே அவர் ஐசியு-வினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
என்ன செய்வதென்று தெரியாமல் தேமே என்று வெளியில் நின்றுகொண்டிருந்தேன். இதற்குள் நூறு முறையாவது அவர் பிழைக்கவேண்டுமென்று வேண்டியிருப்பேன். இன்று மதியம்தான் “இவனுக்கு ஏதாவது ஆவனும்" என்று மனதார வேண்டிக்கொண்ட ஒருவரின் உயிருக்காக இப்போது மன்றாடிக்கொண்டிருக்கிறேன். ம்ம்ம்.. விசித்திரமாய் இருந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எண்ணங்கள் கடந்துகொண்டிருந்தன.
அப்போதுதான் கால் வந்தது.
“என்னடா மாப்ள.. என்னாச்சுடா.. இந்த நேரத்தில கால் பண்ணியிருக்க.. ஏதாவது பிரச்சனையாடா..?"
அடுத்த அரைமணியில் என் கூட இருந்தான் ஆனந்த். கொஞ்சம் தெம்பாக இருந்தது.
“அவர் வீட்டுக்கு சொல்லிட்டியாடா?"
“இன்னும் இல்லடா. அவர் வீட்டு நம்பர் இல்ல என்கிட்ட.."
“அவர் கார்ல ஏதாவது இருக்கும்.. வா போய்ப்பாக்கலாம்.."
அவரை தள்ளிவிட்டதில் விழுந்திருக்க வேண்டும்.. அவரது பிளாக்பெர்ரி காரினுள்ளேயே கிடந்தது.
அதன்பின் அவர் வீட்டுக்குச்சொல்லி, அவர்களும் வந்து, அவர் ஒரு வாரம் மருத்துவமனையிலும் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுப்பிலும் இருந்து, 3 வது வாரம்தான் அலுவலகம் திரும்பினார்.
பணிக்குத்திரும்பிய முதல்நாளே, அவரே வந்து
"We will go for Coffee " என்றார்.
"Sure" என்றபடி பின் தொடர்ந்தேன்.
“How are you now?"
“I am alright now. No worries" என்றபடி காஃபியை பருகத்தொடங்கினார்.
காஃபிக்குப் பிறகு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம்.
“என்னதான் இருந்தாலும் நான் அன்னைக்கு உன்ன அப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல.."
"Never mind Rajiv..Work is work. Life is life" என்றேன்..
தனியே வந்து சிரிக்கவேண்டும் போல் தோன்றியது.
--
டிஸ்கி:1: இந்த ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் செந்தழல் ரவியின் ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது (lol)
டிஸ்கி:2: ரவி மன்னிக்க :o)